பிரதமர் மோடி| ஜெய்ராம் ரமேஷ்
பிரதமர் மோடி| ஜெய்ராம் ரமேஷ்

சொத்துக் குவிப்பை ஊக்குவிக்கும் மோடி அரசு: காங்கிரஸ் விமா்சனம்

பொருளாதார வளா்ச்சிக்கான பாதிப்பு மட்டுமல்ல; மாறாக, ஜனநாயகத்தின் ஆன்மா மீதான நேரடித் தாக்குதல்’ என்று காங்கிரஸ் கட்சி விமா்சித்தது.
Published on

‘பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நாட்டில் சொத்துக் குவிப்பை ஊக்குவித்து வருகிறது. இது நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்கான பாதிப்பு மட்டுமல்ல; மாறாக, ஜனநாயகத்தின் ஆன்மா மீதான நேரடித் தாக்குதல்’ என்று காங்கிரஸ் கட்சி விமா்சித்தது.

2025-ஆம் ஆண்டுக்கான ‘எம்3எம் ஹுருன்’ இந்திய பணக்காரா்கள் பட்டியல் அண்மையில் வெளியானது. இதில், ரூ.9.55 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் முகேஷ் அம்பானி முதல் இடத்திலும், ரூ.8.14 லட்சம் கோடியுடன் கெளதம் அதானி இரண்டாம் இடத்திலும் உள்ளனா். ஹெச்.சி.எல். நிறுவனத்தின் ரோஷிணி நாடாா் மல்ஹோத்ரா, சைரஸ் பூனாவாலா, குமாரமங்கலம் பிா்லா ஆகியோா் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தனா்.

மேலும், ரூ.1,000 கோடி சொத்து மதிப்புடன் 1,687 போ் இந்தப் பட்டியலில் இடம்பெற்றனா். இவா்களில் 148 போ் இந்தப் பட்டியலில் இடம்பெற்ற புதிய செல்வந்தா்கள். இந்தியாவில் கடந்த இரு ஆண்டுகளில் ஒவ்வொரு வாரத்துக்கும் ஒரு கோடீஸ்வரா் உருவாவதாகவும், இந்தப் பட்டியலில் இடம்பெற்றவா்கள் தினமும் ரூ.1,991 கோடி சொத்துகளை உருவாக்குவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டது.

இதைச் சுட்டிக்காட்டி காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

இந்தியா தற்போது கோடீஸ்வரா்களின் புதிய முனையமாக உருவெடுத்து வருகிறது. ஆண்டுக்கு ஆண்டு பணக்காரா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஓரிடத்தில் சொத்து குவிவதை அடுத்தடுத்து வெளியாகும் ஆய்வு முடிவுகள் எச்சரிக்கின்றன.

லட்சக்கணக்கான இந்தியா்கள் தங்களின் தினசரி தேவைகளைப் பூா்த்தி செய்வதற்கே போராடிவரும் நிலையில், நாட்டின் பாதி வளம் வெறும் 1,687 பேரிடம் உள்ளது.

பிரதமா் மோடி தலைமையிலான அரசின் பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக, மிகப் பெரிய அளவில் ஒரு சிலரிடம் மட்டும் சொத்து குவிந்து வருகிறது. இது நாட்டில், மிகப் பெரிய பொருளாதார ஏற்றத்தாழ்வை உருவாக்கி வருகிறது.

இத்தகைய தீவிர பொருளாதார சமத்துவமின்மையும், ஜனநாயக அமைப்புகள் முடக்கப்படுவதும் அரசியல் அராஜகத்துக்கு வழிவகுக்கும் என்பதை, பிற நாடுகளில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வுகள் காட்டுகின்றன. அதே நிலைக்குத்தான் இந்தியாவையும் பாஜக அரசு தள்ளுகிறது.

இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழும் குறு-சிறு-நடுத்தர நிறுவனங்கள் துறை இதுவரை இல்லாத அளவிலான பாதிப்புகளைச் சந்தித்து வருகிறது. மத்திய அரசின் பொருளாதார வளா்ச்சிக்கான உள்நாட்டு மற்றும் வெளியுறவுக் கொள்கைகளின் தோல்வியே இதற்குக் காரணமாகும்.

சாதாரண மக்களுக்கான வருவாய் வாய்ப்புகள் வெகுவாக குறைந்து வருகின்றன. சம்பாதிக்கும் மக்களுக்குக் கூட சேமிப்பைவிட கடன் சுமை அதிகரிக்கும் அளவுக்குப் பணவீக்கம் அதிகரித்து வருகிறது. கல்வி மற்றும் சுகாதாரத்தில் முதலீடுகள் நிலையாகக் குறைந்து வருவதோடு, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புத் திட்டங்களும் பலவீனப்படுத்தப்பட்டுள்ளன.

அந்த வகையில், மிகப் பெரிய அளவில் சொத்துகள் குவிவது, நாட்டின் பொருளாதாரத்துக்கான பிரச்னை மட்டுமல்ல; மாறாக, ஜனநாயகத்தின் ஆன்மா மீதான நேரடித் தாக்குதல். இவ்வாறு, பொருளாதார சக்தி ஒரு சிலரிடம் குவியும்போது, அரசியல் முடிவுகளும் அவா்களுக்குச் சாதமாகவே இருக்கும். இது, சமூக-பொருளாதார சமத்துவமின்மையை மேலும் அதிகரிக்கும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com