
பிகாரில் குடும்பத்தாரின் அன்பை சோதித்துப் பார்க்க விமானப் படையைச் சேர்ந்த மூத்த வீரர் ஒருவர் இறந்ததைப் போல நடித்துள்ளார்.
இறுதிச் சடங்கு செய்யும் வரை காத்திருந்து, பின்னர் தகன மேடையில் அனைவரும் சூழ்ந்து நின்று அழும்போது எழுந்து நின்று குடும்பத்தாருக்கு அதிர்ச்சி அளித்தார்.
பிகார் மாநிலம் கயா மாவட்டத்திற்குட்பட்ட கொன்சி கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன் லால். 74 வயதான இவர், விமானப் படையில் சேவையாற்றி ஓய்வு பெற்றவர். இவரின் மனைவி 14 ஆண்டுகளுக்கு முன்பே காலமானார். இவருக்கு இரு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். அவர்களுக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளன.
இதனிடையே, குடும்பத்தினரும் உறவினர்களும் தன் மீது வைத்துள்ள அன்பை பரிசோதனை செய்து பார்ப்பதற்காக இறந்தது போல நடித்து நாடகத்தை அரங்கேற்றியுள்ளார்.
சில நாள்களுக்கு முன்பு தனது இறுதிச் சடங்கில் ஆரத்தி எடுக்க வேண்டும் என நெருங்கியவர்களிடம் கூறியுள்ளார். அதன்படி, மோகன் லாலின் இறுதிச் சடங்கில் ஆரத்தி எடுக்கப்பட்டு பாடல்களும் ஒலிபரப்பப்பட்டன.
மோகன் லால் இறந்த செய்தியைக் கேட்டு கிராமத்தில் இருந்த பலரும் அவரின் வீட்டில் குவிந்தனர்.
பின்னர் தகன மேடைக்கு உடலைக் கொண்டு சென்று ஹிந்து மதப்படி இறுதிச் சடங்குகளை செய்து, ஆரத்தி எடுத்து உடலுக்கு தீயிடும் நேரத்தில், மோகன் லால் எழுந்து வந்து குடும்பத்தாருக்கு அதிர்ச்சி அளித்தார். இதனை கிராமத்தில் இருந்த அனைவரும் வியப்பாகப் பார்த்தனர்.
குடும்பத்தார் தன் மீது வைத்துள்ள அன்பை பரிசோதனை செய்யவும், தனது இறுதிச் சடங்கில் யாரெல்லாம் பங்கேற்கிறார்கள் என்பதை அறிந்துகொள்வதற்காகவும் இவ்வாறு செய்ததாக மோகன் லால் கூறியுள்ளார்.
இறுதி மேடை வரை நடித்த மோகன் லாலை கிராமத்தினர் வியந்து பார்த்தனர். பின்னர், தனது மரண செய்தியைக் கேட்டு வந்தவர்கள் அனைவருக்கும் விருந்து வைத்து அனுப்பி வைத்துள்ளார். இச்சம்பவம் கிராமத்தினரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிக்க | ஹரியாணாவில் மற்றொரு காவல் துறை அதிகாரி தற்கொலை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.