

மத்தியப் பிரதேச மாநிலத்தில், கூட்டாக 24 திருநங்கைகள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நிலையில், 2 பேரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தூரின், நந்தல்புரா பகுதியைச் சேர்ந்த திருநங்கைகள் 24 பேர், நேற்று (அக். 15) இரவு ஒன்றாக வீட்டில் உபயோகிக்கும் ஃபினாயிலை குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர். இதையடுத்து, உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர்களை மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், 22 பேரது உடல்நிலை சீரானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இருவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதால், அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், திருநங்கைகள் குழுவின் தலைவரான சப்னா என்பவரை கைது செய்தனர். மேலும், தப்பியோடிய ராஜா ஹாஷ்மி என்பவரை தேடி வருகின்றனர்.
இந்தூரில் உள்ள திருநங்கைகள் சமூகத்தினர் இடையிலான மோதல்கள் மற்றும் அவர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் ஆகியவற்றால், 24 பேரும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
ஆனால், 24 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், அவர்களது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்ட பின்பு, தற்கொலை முயற்சிக்கான முழுமையான காரணம் தெரியவரும் என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க: பணி நீக்கம்! 15% மனிதவள அதிகாரிகளை வெளியேற்றும் அமேசான்!
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.