
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ஹர்சரண் சிங் புல்லர், லஞ்ச குற்றச்சாட்டில் மத்திய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.
அவரின் அலுவலகம், வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில், ரூ. 5 கோடி ரொக்கம், ஒன்றரை கிலோ தங்க நகைகள், சொகுசுக் கார்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்துள்ளனர்.
பழைய வழக்கை முடித்து வைப்பதற்காக ரோப்பர் சரக டிஐஜி ஹர்சரண் சிங் புல்லர், இடைத்தரகர் மூலம் ரூ. 8 லட்சம் லஞ்சம் கோரியதாக ஃபதேஹ்கர் சாஹிப் மாவட்டத்தைச் சேர்ந்த இரும்பு வியாபாரி ஆகாஷ் பட்டா என்பவர் சிபிஐ-யில் புகார் அளித்துள்ளார்.
இதனிடையே, மொஹாலியில் உள்ள தனது அலுவலகத்துக்கு முதல் தவணை பணத்தை பெறுவதற்காக ஆகாஷை ஹர்சரண் அழைத்தபோது, சிபிஐ காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்துள்ளனர்.
தொடர்ந்து, ஹர்சரண் சிங் புல்லர் அலுவலகம், வீடுகளில் சோதனை நடத்திய சிபிஐ அதிகாரிகள், அவரையும் இடைத்தரகர் ஒருவரையும் கைது செய்தனர்.
பல கோடி மதிப்பு பொருள்கள் பறிமுதல்
டிஐஜி ஹர்சரண் சிங் புல்லர் கைது நடவடிக்கைக்காக பஞ்சாப் மாநில சிபிஐ அதிகாரிகளை தவிர்த்து, வெளிமாநில அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
ஹர்சரண் சிங்கின் அலுவலகம், வீடு, பண்ணை வீடு உள்ளிட்ட இடங்களில் வியாழக்கிழமை காலை முதல் சிபிஐ குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையின் முடிவில், ரூ.5 கோடி ரொக்கம், 1.5 கிலோ நகைகள், 22 விலை உயர்ந்த கடிகாரங்கள், ஆடி, மெர்சிடிஸ் உள்ளிட்ட சொகுசுக் கார்கள், லாக்கர் சாவிகள், இறக்குமதி செய்யப்பட்ட 40 லிட்டர் மதுபான பாட்டில்கள், கைத் துப்பாக்கி, ரிவால்வர் உள்ளிட்டவை சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும், அசையா சொத்துகள் தொடர்பான ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
இதனிடையே, இடைத்தரகரிடம் இருந்தும் ரூ. 21 லட்சம் பணத்தை சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
யார் இந்த ஹர்சரண் சிங் புல்லர்?
2009 ஆம் ஆண்டு பஞ்சாப் பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான ஹர்சரண் சிங் புல்லர், முன்னாள் பஞ்சாப் டிஜிபி மேஹல் சிங் புல்லரின் மகன் ஆவார்.
மொஹாலி காவல்துறை கண்காணிப்பாளராகவும், பட்டியாலா சரக காவல்துறை துணைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அகாலி தளம் கட்சியின் தலைவர் விக்ரம் சிங் மஜிதியாவை விசாரித்த சிறப்பு புலனாய்வுக் குழுவை வழிநடத்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.