/

மோந்தா தீவிர புயல்: கடைகள், வணிக வளாகங்களை மூட புதுவை அரசு உத்தரவு!

ஏனாமில் கடைகள், வணிக வளாகங்களை மூட உத்தரவிடப்பட்டிருப்பது பற்றி...

News image
ஏனாமில் தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர்- EPS
Updated On :28 அக்டோபர் 2025, 7:31 am

இணையதளச் செய்திப் பிரிவு

மோந்தா தீவிர புயல் எதிரொலியாக ஏனாமில் உள்ள கடைகள், வணிக வளாகங்களை பகல் 12 மணியுடன் மூட புதுவை அரசு உத்தரவிட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள மோந்தா புயல், இன்று காலை தீவிர புயலாக வலுப்பெற்று கரையை நோக்கி நகர்ந்து வருகின்றது. இன்று மாலை ஆந்திரக் கடற்கரை அருகே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மோந்தா தீவிர புயல் கரையைக் கடக்கும்போது, பலத்த மழையுடன் 110 கி.மீ. வேகத்தில் தரைக் காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், ஆந்திரம், ஒடிஸா மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த நிலையில், ஆந்திர கடற்கரையை ஒட்டியுள்ள புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஏனாம் மண்டலமும் பாதிப்புக்குள்ளாகும் பகுதியாக இருக்கிறது. இதன்காரணமாக ஏற்கெனவே பள்ளி, கல்லூரிகளுக்கு அக். 27 முதல் 29 வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஏனாம் மண்டலத்தில் உள்ள கடைகள், வணிக வளாகங்களை இன்று பகல் 12 மணிக்கே மூட ஏனாம் மண்டல அதிகாரி அன்கித் குமார் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், தேவையான மருத்துவ வசதிகள், மருத்துவப் பணியாளர்கள், மின்சார ஊழியர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக அன்கித் குமார் தெரிவித்துள்ளார்.

summary

Orders to close shops and commercial complexes in Yanam

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.