
தில்லியில் நடைபெற்ற குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மாலை 5 மணியுடன் நிறைவு பெற்றது.
காலை 10 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவில் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் வாக்களித்தனர். இன்னும் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டு, தேர்தல் முடிவுகள் இன்றே அறிவிக்கப்படவுள்ளது.
மொத்தமாக 782 வாக்குகள் பதிவாக வேண்டிய நிலையில், 20 வாக்குகள் மட்டுமே செலுத்தப்படாமல் உள்ளதாகத் தெரிகிறது. எஞ்சிய அனைத்து உறுப்பினர்களும் வாக்களித்துள்ளனர். வெற்றி பெறுவதற்கு குறைந்தபட்சம் 392 வாக்குகள் தேவை.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 422 எம்.பி.க்கள் பலம் உள்ளதால், அக்கூட்டணி வேட்பாளரே வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
543 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையில் ஒரு உறுப்பினர் இடம் காலியாக உள்ளது. 233 உறுப்பினர்களைக் கொண்ட மாநிலங்களவையில் 5 எம்.பி.க்கள் இடம் காலியாக உள்ளது. இதுதவிர 12 நியமன எம்.பி.க்கள் வாக்களித்துள்ளனர்.
பிஜு ஜனதா தளம் மற்றும் பாரத ராஷ்டிர சமிதி கட்சிகளின் எம்.பி.க்கள் குடியரசு துணைத் தலைவர் தேர்தலை புறக்கணித்துள்ளனர். மாலை 4 மணி நிலவரப்படி 762 எம்.பி.க்கள் வாக்களித்துள்ளனர். 5 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவு பெற்ற நிலையில், 20 எம்.பி.க்கள் வாக்களிக்கவில்லை எனத் தெரிகிறது.
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் சி.பி. ராதாகிருஷ்ணனும் (67) எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி சார்பில் பி. சுதர்சன் ரெட்டியும் (79) போட்டியிட்டுள்ளனர்.
இதையும் படிக்க | மல்லிகை மட்டுமல்ல, ரசகுல்லா முதல் தேயிலை வரை! ஆஸ்திரேலியாவில் தடை செய்யப்பட்டவை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.