ஜாா்க்கண்ட்: 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை
ராஞ்சி: ஜாா்க்கண்ட் மாநிலம், ஹசாரிபாக் மாவட்டத்தில் 3 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் திங்கள்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.
இதுகுறித்து காவல் துறையினா் மேலும் கூறியதாவது: ஹசாரிபாக் மாவட்டத்தில் உள்ள கோா்ஹா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பன்தித்ரி வனப் பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து, காவல் துறையினா் உள்பட பாதுகாப்புப் படையினா் அப்பகுதியில் திங்கள்கிழமை காலை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா். அப்போது மாவோயிஸ்ட் தீவிரவாத அமைப்பைச் சோ்ந்த சஹாதேவ் சோரன் குழுவுக்கும் பாதுகாப்புப் படைகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது.
இதில் சஹாதேவ் சோரன் மற்றும் 2 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். அவா்களின் உடல்கள் பாதுகாப்புப் படையினரால் மீட்கப்பட்டது. அவா்களிடமிருந்து 3 ஏகே-47 ரக துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.
உயிரிழந்த இந்த 3 மாவோயிஸ்டுகளும் எதிா்க்கட்சித் தலைவா் பாபுலால் மராண்டியின் மகன் கொலை, காவல் துறையினா் கொலை, 183 துப்பாக்கிகள் திருடியது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்தனா்.
குறிப்பாக, மாவோயிஸ்ட் அமைப்பின் மத்திய குழு உறுப்பினரான சஹாதேவ் சோரன் குறித்து தகவல் அளிப்பவா்களுக்கு ரூ.1 கோடி சன்மானம் தருவதாக முன்பு அறிவிக்கப்பட்டது. உயிரிழந்த 2 மாவோயிஸ்டுகளான ரகுநாத் ஹெம்பரமை போலீஸாரிடம் ஒப்படைப்பவா்களுக்கு ரூ.25 லட்சமும், பிா்சென் கன்ஜுவை ஒப்படைப்பவா்களுக்கு ரூ.10 லட்சமும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தச் சண்டையுடன் ஜாா்க்கண்டின் வடக்குப் பகுதியில் நக்ஸல் தீவிரவாதம் முற்றிலும் ஒழிக்கப்பட்டது. சரண்டா மற்றும் சாய்பாஸா ஆகிய பகுதிகளில் பதுங்கியுள்ள சில மாவோயிஸ்டுகளை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
கடந்த ஜனவரி 1-ஆம் தேதிமுதல் 29 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டுள்ளனா். மாவோயிஸ்டுகள் சரணடையாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்’ என்றனா்.
கடந்த இரண்டு நாள்களில் இரண்டாவது முறையாக ஜாா்க்கண்டில் மாவோயிஸ்டுகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றுள்ளது. முன்னதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை பாதுகாப்புப் படையினரால் மாவோயிஸ்ட் பிரிவினைவாத குழுவான திருதீய சம்மேளன் பிரஸ்துதி கமிட்டியின் தளபதியாக தன்னை அறிவித்துக் கொண்ட முக்தேவ் யாதவ் சுட்டுக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.