
ஊடுருவல்களை எதிர்க்கட்சி ஆதரிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறுவது, திசைதிருப்பும் முயற்சி என ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் விமர்சித்துள்ளார்.
ஊடுருவல்காரர்களுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு அளிப்பதாகவும், அவர்களை பாதுகாப்பதாகவும் பிரதமர் மோடி கூறுவது, மாநிலத் தேர்தலையொட்டி கையாளும் திசைதிருப்பும் முயற்சி எனக் குறிப்பிட்டுள்ளார்.
பிகார் தலைநகர் பாட்னாவில் செய்தியாளர்களுடன் தேஜஸ்வி யாதவ் பேசியதாவது,
''பிகாரில் வெளிநாட்டினரின் ஊடுருவல் இருப்பதாக வைத்துக்கொள்வோம். இப்போது ஒரு கேள்வி எழும் அல்லவா? நீங்கள் (நரேந்திர மோடி) 11 ஆண்டுகளாக ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறீர்கள். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 20 ஆண்டுகளாக பிகாரை ஆட்சி செய்கிறது. நீங்கள் என்ன செய்துகொண்டு இருந்தீர்கள்? என்ற கேள்வி எழுப்பப்படும்.
இந்தக் கேள்விதான் உத்தரகண்ட் சட்டப்பேரவைத் தேர்தலின்போது எதிர்க்கட்சியாக இருந்து பாஜக எழுப்பியது. ஆனால், சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கத்திலேயேதான் அவ்வாறு கேள்வி எழுப்பியது. தற்போது அதனை மறந்துவிட்டது.
ஊடுருவல்காரர்கள் என்று பாஜக கூறுவது திசைதிருப்பும் முயற்சி மட்டும்தான். தேசிய ஜனநாயகக் கூட்டணி நல்ல ஆட்சியைக் கொடுக்கத் தவறிவிட்டது. வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம் போன்றவற்றை உறுதி செய்து மக்களின் குறைகளைக் களைய தவறிவிட்டது.
ஆனால், இவை அனைத்தையும் உறுதி செய்யும் வகையில் நாங்கள் ஆட்சி அமைப்போம். பிகாரின் சீமாஞ்சல் பகுதியில் ஊடுருவல்களால் மக்கள்தொகை நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பிகார், மேற்கு வங்கம், அஸ்ஸாம் மாநில சகோதரிகளும் மகள்களும் தங்கள் பாதுகாப்பு குறித்து அச்சம்கொள்ளத் தொடங்கியுள்ளனர்.
நாட்டில் வாக்குத்திருட்டு நடைபெறுவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த யாத்திரை மேற்கொண்டார். ஆனால், வெளிநாட்டு ஊடுருவல்காரர்களை காப்பதற்காக காங்கிரஸும் ராஷ்ட்ரிய ஜனதா தளமும் இவ்வாறு செய்வதாக பிரதமர் மோடி திரித்துக் கூறுகிறார்'' என தேஜஸ்வி குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | பிரதமர் மோடியின் பிறந்தநாள் ஒரு கருப்பு நாள்: காங்கிரஸ் எம்பி விமர்சனம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.