ஐசிஎஃப் ரயில் பெட்டித் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டுள்ள அதிநவீன வசதிகள் உள்ள சரக்கு ரயில் பெட்டிகள்.
ஐசிஎஃப் ரயில் பெட்டித் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டுள்ள அதிநவீன வசதிகள் உள்ள சரக்கு ரயில் பெட்டிகள்.

விமானங்களில் உள்ள அதிநவீன வசதிகளுடன் ‘வந்தே ப்ரைட்’ ரயில்கள்: வரும் நவம்பரில் இயக்கத் திட்டம்

விமானங்களில் உள்ள அதிநவீன வசதிகளுடன் கூடிய 2 ‘வந்தே பாரத்’ சரக்கு ரயில்கள் (வந்தே ப்ரைட்) தயாரிக்கும் பணி சென்னை ஐசிஎஃப் வளாகத்தில் நிறைவடைந்துள்ளதை அடுத்து வரும் நவம்பரில் இயக்க திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
Published on

விமானங்களில் உள்ள அதிநவீன வசதிகளுடன் கூடிய 2 ‘வந்தே பாரத்’ சரக்கு ரயில்கள் (வந்தே ப்ரைட்) தயாரிக்கும் பணி சென்னை ஐசிஎஃப் வளாகத்தில் நிறைவடைந்துள்ளதை அடுத்து வரும் நவம்பரில் இயக்க திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னையில் ஐசிஎஃப்-இல் ஆண்டுக்கு சுமாா் 4,000-க்கும் அதிகமான ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அதிநவீன வசதிகளுடன், அதிவேகமாக செல்லும் ரயில் என்ஜின்கள் மற்றும் ரயில் பெட்டிகளை ஐசிஎஃப் தயாரித்து வருகிறது.

அந்த வரிசையில் நாட்டிலேயே முதல்முறையாக விமானங்களில் சரக்குகளை ஏற்றுவதற்கான வசதிகளை உள்ளடக்கிய சரக்கு ரயில் பெட்டிகளுடன் கூடிய 2 சரக்கு ரயில்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. கடந்த 2018 -ஆம் ஆண்டு ‘வந்தே பாரத்’ சரக்கு ரயில் தயாரிக்கும் திட்டம் தொடங்கப்பட்டது. தற்போது அவை முழுமையாக நிறைவடைந்துள்ளன.

ஒவ்வொரு சரக்கு ரயிலும் தலா 16 சரக்குப் பெட்டிகளைக் கொண்டுள்ளன. உள்ளே சரக்குகள் அடங்கிய ரேக்குகளை எளிதில் இயக்கி நிறுத்தும் வகையில் சக்கரங்களுக்கான வழிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. குளிா்சாதன வசதியுடன், இரு ரயில்களும் மணிக்கு சுமாா் 90 கி.மீ. முதல் 160 கி.மீ. வேகம் செல்லும் வகையில் வடி வமைக்கப்பட்டுள்ளதாகவும், பெட்டிக்கு சுமாா் 260 டன் பொருள்களை ஏற்றலாம் எனவும் ரயில்வே பொறியாளா்கள் தெரிவித்தனா். இந்த ரயில்களின் சோதனை ஓட்டம் நடைபெறும். இதையடுத்து வரும் நவம்பரில் சரக்குப் போக்குவரத்து அதிகமுள்ள நிலையங்களில் இயக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.

சாதாரண சரக்கு ரயில் பெட்டிகள் உற்பத்தியைவிட குறைந்த செலவில் இவை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே பெட்டிகள் உற்பத்திப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com