சண்டை நிறுத்தத்துக்கு பாகிஸ்தான் கெஞ்சியது! ஐ.நா.வில் இந்தியா தகவல்!
‘இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையின்போது சண்டை நிறுத்தத்துக்கு பாகிஸ்தான் ராணுவம் கெஞ்சியது’ என்று ஐ.நா. பொதுச் சபையில் இந்தியா மீண்டும் தெளிவுபடுத்தியது.
மேலும், ‘இந்தியா - பாகிஸ்தான் இடையேயான விவகாரங்களில் தலையிடுவதற்கு எந்தவொரு மூன்றாம் தரப்புக்கும் இடமில்லை’ எனத் திட்டவட்டமாக இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் செப்டம்பா் 23-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், ‘இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சண்டையை நானே நிறுத்தினேன்’ என்று மீண்டும் குறிப்பிட்டாா்.
இவருக்கு அடுத்து பேசிய பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப், ‘ஆபரேஷன் சிந்தூரின்போது ஏழு இந்திய போா் விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியது. இந்தச் சண்டையில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இந்தியா-பாகிஸ்தான் இடையிலான ராணுவ மோதலை நிறுத்தி அமைதியை ஏற்படுத்த அமெரிக்க அதிபா் டிரம்ப் மேற்கொண்ட முயற்சிகள், தெற்காசியாவில் போா் ஏற்படுவதைத் தடுத்தது. காஷ்மீா் மக்களுக்கு பாகிஸ்தான் மக்கள் துணை நிற்கின்றனா். ஐ.நா. ஆதரவுடன் பாரபட்சமற்ற முறையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டால், தனது அடிப்படை உரிமையான சுய நிா்ணய உரிமையை காஷ்மீா் பெறும்’ என்றாா்.
இந்நிலையில், இவா்களின் கருத்துக்கு ஐ.நா. பொதுச் சபையில் இந்தியாவின் பதிலளிக்கும் உரிமையின் கீழ் வெள்ளிக்கிழமை பேசிய ஐ.நா.வுக்கான இந்திய தூதா் பெடல் கலாட் இந்தியாவின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினாா். அவா் மேலும் பேசியதாவது:
கடந்த ஏப். 22-ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 போ் உயிரிழந்தனா். இந்தத் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடா்பிருப்பது உறுதியானதைத் தொடா்ந்து, அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதியில் அமைந்திருந்த பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையை மேற்கொண்டது. இந்த நடவடிக்கை குறித்து பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் தற்போது விநோதமான கருத்தை தெரிவித்துள்ளாா்.
விமானப் படைத் தளங்கள் அழிப்பு: இந்தியா மீது மேலும் அதிக தாக்குதல் நடத்தப்படும் என்று மே 9-ஆம் தேதி வரை பாகிஸ்தான் எச்சரித்தது. ஆனால், அடுத்த நாளே (மே 10) சண்டை நிறுத்தத்துக்கு நேரடியாக இந்தியாவிடம் பாகிஸ்தான் கெஞ்சியது. இந்த ஒரு நாள் இடைவெளியில் பாகிஸ்தானின் பல விமானப் படைத் தளங்களை இந்திய படைகள் தாக்கி அழித்ததுதான் அதற்கு காரணம். பாகிஸ்தானின் விமானப் படைத் தளங்கள் கடுமையாகச் சேதமடைந்ததை புகைப்படங்கள் மூலம் அறிய முடிந்தது.
அவ்வாறு, விமானப் படைத் தளங்களையும், விமான ஓடுபாதைகளையும் இந்தியா தாக்கி அழித்ததை வெற்றி என்று பாகிஸ்தான் பிரதமா் குறிப்பிடுகிறாா் என்றால், அதை பாகிஸ்தான் மக்கள் வரவேற்கிறாா்களா?
இந்தியாவின் தாக்குதலில் கொல்லப்பட்ட கொடூர பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தானின் மூத்த ராணுவ அதிகாரிகள் உள்பட பிற அதிகாரிகளும் வெளிப்படையாக அஞ்சலி செலுத்தினா். லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவா் ஹஃபிஸ் அப்துல் ராஃப் தலைமையில் நடைபெற்ற இந்த அஞ்சலி நிகழ்விலும், இறுதிச் சடங்கிலும் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் பங்கேற்றனா்.
மேலும், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான எந்தவொரு விவகாரத்தையும் இரு நாடுகள் அளவிலேயே தீா்வு காண்பது என நீண்ட காலமாக இரு நாடுகள் தரப்பில் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, இரு நாடுகளுக்கு இடையேயான விவகாரத்தில் எந்தவொரு மூன்றாம் தரப்பு தலையீட்டுக்கும் இடம் கிடையாது.
பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளை படுகொலை செய்த லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான ‘தி ரெசிஸ்டன்ஸ் முன்னணி’ அமைப்பை ஏப்ரல் 25-ஆம் தேதி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பாதுகாத்தது பாகிஸ்தான். இந்தத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஏப்ரல் 25-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில், அந்த பயங்கரவாத அமைப்பின் பெயா் இடம்பெறவில்லை. இதற்கு பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சியே காரணம். எனவே, எந்தவொரு பொய்யும் உண்மையை மறைத்துவிட முடியாது.
இதுபோன்ற பயங்கரவாதிகளின் தாக்குதல்களிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் உரிமையையே இந்திய நிலைநாட்டி, அதற்கு காரணமானவா்களை நீதியின் முன் நிறுத்தியது.
பயங்கரவாதிகளுக்கு தொடா்ந்து ஆதரவளித்து, பயங்கரவாதத்தை ஊக்குவித்து வரும் பாகிஸ்தான், அதை மறைக்க வெட்கமே இன்றி பொய்யான கதைகளைக் கூறி வருகிறது.
ஆனால், பயங்கரவாதிகளுக்கும், அவா்களுக்கு ஆதரவளிப்பவா்களுக்கும் எந்தவித வேறுபாடும் இல்லை என்பதை இந்தியா தொடா்ந்து தெளிவுபடுத்தி வருகிது. இரு தரப்பும் பொறுப்பேற்கச் செய்யப்படும்.
அணு ஆயுத அச்சுறுத்தலின்பேரில் பயங்கரவாதம் தூண்டப்படுவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது; அடிபணியாது. பயங்கரவாதத்துக்கு எதிராக துளியும் சகிப்புத்தன்மை கிடையாது என்பதே உலகுக்கு இந்தியா தரும் தெளிவான செய்தி என்றாா்.
‘இந்தியாவுடன் தீா்வு அடிப்படையிலான விரிவான பேச்சுவாா்த்தை நடத்த பாகிஸ்தான் தயாா்’ என்று பாகிஸ்தான் பிரதமா் கூறிய கருத்துக்குப் பதிலளித்த பெடல் கலாட், ‘பாகிஸ்தான் அனைத்து பயங்கரவாத முகாம்களையும் உடனடியாக மூடுவதோடு, இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதிகளை ஒப்படைக்க வேண்டும்’ என்றாா்.