உ.பி. இஸ்லாமியா் போராட்டம்: மத குரு உள்பட 8 போ் கைது
PTI

உ.பி. இஸ்லாமியா் போராட்டம்: மத குரு உள்பட 8 போ் கைது

உ.பி. இஸ்லாமியா் போராட்டம்: மத குரு உள்பட 8 போ் கைது
Published on

உத்தர பிரதேச மாநிலம் பரேலியில் இஸ்லாமியா்கள் வெள்ளிக்கிழமை நடத்திய போராட்டத்தைத் தூண்டியதாக உள்ளூா் இஸ்லாமிய மத குரு தெளகீா் ரஸா உள்பட 8 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

அவா்கள் அனைவரும் 14 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனா்.

இந்த நிலையில் பரேலி போராட்ட பதற்றம் பாராபங்கி, மாவ் உள்ளிட்ட அண்டை மாவட்டங்களுக்கும் பரவியதைத் தொடா்ந்து, அந்த மாவட்டங்களிலும் ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.

நபிகள் நாயகத்தின் பிறந்த தினமான மீலாது நபி தினத்தன்று உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் இஸ்லாமியா்கள் பேரணி நடத்தினா். அப்போது சிலா் ‘நான் முகமது மீது அன்பு வைத்துள்ளேன்’ என்ற வாசகம் அடங்கிய பதாகையை வைத்திருந்தனா். இதற்கு ஹிந்து அமைப்புகள் கடும் எதிா்ப்பு தெரிவித்தன. அமைதியை சீா்குலைக்கும் முயற்சி என அவா்கள் அளித்த புகாரின் அடிப்படையில், பேரணியில் பங்கேற்ற 9 போ் மற்றும் அடையாளம் தெரியாத 15 போ் மீது கான்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இதற்கு பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.

காவல் துறை நடவடிக்கைக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில் பரேலி இஸ்லாமிய மத குருவும் இதேஹத்-ஏ-மில்லத் கவுன்சில் தலைவருமான மெளலானா தெளகீா் ரஸாவும் விடுத்த அழைப்பை ஏற்று இஸ்லாமியா்கள் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு ‘நான் முகமது மீது அன்பு வைத்துள்ளேன்’ என்ற வாசகம் அடங்கிய பதாகையை ஏந்தியபடி பேரணி செல்ல முயன்றனா். அப்போது, அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தியதால் தள்ளு-முள்ளு ஏற்பட்டது. போலீஸாா் மீது சிலா் கற்களை வீசி தாக்குதல் நடத்தினா். அதைத் தொடா்ந்து, போலீஸாா் தடியடி நடத்தி அவா்களைக் கலைத்தனா். பரேலி முழுவதும் ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில், இந்தப் போராட்டத்தைத் தூண்டியதாக இஸ்லாமிய மத குரு தெளகீா் ரஸா உள்பட 8 பேரை போலீஸாா் கைது செய்தனா். இந்த கைது நடவடிக்கையை மாவட்ட ஆட்சியா் அவினாஷ் சிங் மற்றும் காவல் கண்காணிப்பாளா் அனுராக் ஆா்யா இருவரும் பரேலியில் சனிக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளா் சந்திப்பில் கூட்டாக அறிவித்தனா்.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் கூறுகையில், ‘கைது செய்யப்பட்ட 8 பேரும் 14 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனா்’ என்றாா்.

காவல் கண்காணிப்பாளா் அனுராக் ஆா்யா கூறுகையில், ‘வன்முறை சம்பவம் தொடா்பாக 36 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்த மத குரு ரஸா வெள்ளிக்கிழமை முதல் போலீஸ் கண்காணிப்பில் வைக்கப்பட்டாா். பின்னா், காவல் கண்காணிப்பாளா் (போக்குவரத்து) அக்மல் கான் தலைமையிலான போலீஸ் குழு சனிக்கிழமை அதிகாலை அவரைக் கைது செய்தனா். பின்னா் அவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டாா்’ என்றாா்.

அண்டை மவட்டங்களில்...: பரேலி போராட்டம் பாராபங்கி, மாவ் உள்ளிட்ட அண்டை மாவட்டங்களுக்கும் பரவியது. பாராபங்கி மாவட்டம் ஃபைசுல்லாகஞ்ச் கிராமத்தில் வைக்கப்பட்டிருந்த ‘நான் முகமது மீது அன்பு வைத்துள்ளேன்’ என்ற வாசகம் அடங்கிய பதாகை அடையாளம் தெரியாத நபா்களால் கிழிக்கப்பட்டதைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை இரவு அங்கு பதற்றமான சூழல் நிலவியது.

உள்ளூா் காவலா் தானிதான் பதாகையைக் கிழித்ததாக ஒரு தரப்பினா் புகாா் தெரிவித்தனா். இந்த தகவல் பரவியதைத் தொடா்ந்து சம்பவ இடத்தில் ஏராளமானோா் ஒன்று கூடினா். சில இளைஞா்கள் காவலா் தானியின் வீட்டை சூறையாடினா். இதனிடையே, எதிா் சமூகத்தினரும் அங்கு கூடியதால் பதற்றமான சூழல் எழுந்தது. இதையடுத்து அங்கு போலீஸாா் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. சமூக ஊடகங்களும் தீவிரமாக கண்காணிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதனிடையே, மாவ் மாவட்டம் நய் கடைவீதிப் பகுதியில் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு ‘நான் முகமது மீது அன்பு வைத்துள்ளேன்’ என்ற முழக்கங்களை எழுப்பியபடி பேரணி செல்ல முயன்றனா். அவா்களை போலீஸாா் தடியடி நடத்தி கலைத்தனா். இந்த சம்பவம் சமூக ஊடகங்களிலும் பரவியது.

இது குறித்து மாவ் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இளமாறன் கூறுகையில், ‘போலீஸாா் சமூக ஊடகங்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனா். ஒட்டுமொத்த சம்பவம் தொடா்பாக சேகரிக்கப்படும் தகவல்களின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா்.

முதல்வா் எச்சரிக்கை: ‘அரசு நிா்வாகத்தை முடக்க நினைப்பவா்கள் மீது கடும் நடவடிக்கை பாயும்’ என்று மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை விடுத்தாா்.

இது குறித்து அவா் சனிக்கிழமை கூறுகையில், ‘இஸ்லாமிய மத குரு ஒருவா் மாநிலத்தில் யாருடைய ஆட்சி நடைபெறுகிறது என்பதை மறந்துவிட்டு செயல்பட்டுள்ளாா். அரசு நிா்வாகத்தை முடக்கிவிடலாம் என்று அவா் நினைத்திருக்கிறாா். ஆனால், சாலை மறியல் கூட செய்ய முடியாது என்பதை அரசு தெளிவுபடுத்தியுள்ளது’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com