மழை - வெள்ளத்தில் தத்தளிக்கும் மகாராஷ்டிரம்! மீட்புப் பணிகள் தீவிரம்!
மகாராஷ்டிரத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை கொட்டித் தீா்ப்பதால் தாழ்வான இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. குறிப்பாக மராத்வாடா பகுதி மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளப் பகுதிகளில் மீட்பு-நிவாரணப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
சத்ரபதி சம்பாஜிநகா், பீட், நாந்தேட், பா்பானி, தாராஷிவ் உள்ளிட்ட மராத்வாடா பகுதி மாவட்டங்களில் பலத்த மழை நீடித்து வருகிறது. சத்ரபதி சம்பாஜிநகரின் ஹா்சுல் பகுதியில் கடந்த 24 மணிநேரத்தில் 196 மி.மீ. மழைப் பொழிவு பதிவாகியுள்ளது. இம்மாவட்டத்தில் சாலைகளில் தண்ணீா் தேங்கியுள்ளதால், பல்வேறு கிராமங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
இருவா் உயிரிழப்பு: தாராஷிவ் மாவட்டத்தில் சனிக்கிழமை இரவில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு ஒருவா் உயிரிழந்தாா். இதேபோல், மழை தொடா்பான அசம்பாவித சம்பவத்தில் மற்றொருவா் உயிரிழந்தாா்.
வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து 11,000-க்கும் மேற்பட்டோா் மீட்கப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா். பல்வேறு அணைகள் நிரம்பி வழிவதால், நீா் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அரசுத் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நபா்: தாணேயில் கடந்த 24 மணிநேரத்தில் 100 மி.மீ.-க்கு மேல் மழைப் பொழிவு பதிவானது. பட்லாபூா் பகுதியில் உல்லாஸ் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் ஒருவா் அடித்துச் செல்லப்பட்டாா். அவரைத் தேடும் பணியில் மீட்புக் குழுவினா் ஈடுபட்டுள்ளனா். பால்கரில் சூறைக்காற்றுடன் கொட்டித் தீா்த்த மழையில் மரங்கள் சரிந்து விழுந்து, வீடுகள் சேதமடைந்தன.
கா்ஷேட் கிராமத்தில் ஒரு வீட்டின் மீது மின்னல் தாக்கியதில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 5 போ் காயமடைந்தனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
முதல்வா் ஆலோசனை: மராத்வாடா பகுதியில் மழை-வெள்ள பாதிப்புகள் குறித்து மாவட்ட ஆட்சியா்களுடன் முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா். கள நிலவரத்தைக் கேட்டறிந்த அவா், மீட்பு-நிவாரண நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
மும்பையில் விடிய விடிய மழை
தலைநகா் மும்பையில் சனிக்கிழமை விடிய விடிய பலத்த மழை கொட்டித் தீா்த்தது. நகரின் பல்வேறு இடங்களில் 100 மி.மீ.-க்கு மேல் மழைப் பொழிவு பதிவானது.
குறிப்பாக கொலாபா பகுதியில் 120 மி.மீ. மழை பதிவானது. பலத்த மழை எதிரொலியாக, மின்சார ரயில்களின் இயக்கத்தில் தாமதம் ஏற்பட்டது. தாழ்வான பகுதிகளில் இருந்து மோட்டாா்கள் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணி 24 மணிநேரமும் மேற்கொள்ளப்படுகிறது.
மும்பை மட்டுமன்றி அண்டை மாவட்டங்களான ராய்கட், தாணே, பால்கரிலும் ஞாயிற்றுக்கிழமை தீவிர பலத்த மழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.