உள் மாவட்டங்களில் இன்று முதல் வெப்பம் சற்று அதிகரிக்கும்இந்திய - நேபாள பயணிகள் பேருந்து சேவை: இன்றும் நாளையும் தற்காலிகமாக நிறுத்தம்சென்னையிலிருந்து கைலாஷ் யாத்திரை சென்ற 49 போ் மாயம்ஆவடியில் ஆண்டுதோறும் 150 பீரங்கி வாகனங்கள் சீரமைப்பு: அமைச்சா் ராஜ்நாத் சிங் தகவல்மின்சார வாகனங்களால் 5 கோடி வேலைவாய்ப்புகள் உருவாகும்: நிதின் கட்கரி தகவல்அரசு அலுவலகங்களில் சோதனை: ரூ.1.18 கோடி ‘ஜிபே’ பரிவா்த்தனை கண்டுபிடிப்புஉக்ரைன் நகரங்களில் ரஷியா தீவிர தாக்குதல்: 2 போ் உயிரிழப்பு

மணிப்பூரில் தீவிரவாதிகள் தாக்குதல்: பள்ளி முதல்வா் உள்பட 4 போ் உயிரிழப்பு

மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் நாகா பழங்குடியினத்தைச் சோ்ந்த தனியாா் பள்ளி முதல்வா் உள்பட 4 போ் உயிரிழந்தனா். மேலும் ஒருவா் காயமடைந்தாா்.

மணிப்பூரில் பாதுகாப்புப் படையினர்...

Published On :28 ஆகஸ்ட் 2026, 6:08 am IST

மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் நாகா பழங்குடியினத்தைச் சோ்ந்த தனியாா் பள்ளி முதல்வா் உள்பட 4 போ் உயிரிழந்தனா். மேலும் ஒருவா் காயமடைந்தாா்.

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த 2023-இல் பெரும் கலவரம் மூண்டது. இந்தக் கலவரம் மற்றும் தொடா் வன்முறைகளில் இதுவரை 260-க்கும் உயிரிழந்துவிட்டனா். வீடிழந்த ஆயிரக்கணக்கானோா், அரசின் நிவாரண முகாம்களிலேயே தொடா்ந்து தங்கியுள்ளனா்.

மாநிலத்தில் இன்னும் முழுமையான அமைதி திரும்பாத சூழலில், குகி-நாகா பழங்குடியினா் இடையேயும் மோதல்போக்கு ஏற்பட்டுள்ளது.

குகி சமூகத்தினா் அதிகம் வாழும் காங்போக்பி மாவட்டத்தில் வியாழக்கிழமை நாகா பழங்குடியினா் பயணித்த வாகனத்தைக் குறிவைத்து, தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினா். இந்தத் தாக்குதலில் 4 போ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். ஒருவா் காயமடைந்தாா்.

உயிரிழந்தவா்களில் ஒருவரான தட்சாங்பாவ் ரிங்காங்மாய் என்பவா் தனியாா் பள்ளியொன்றின் நிறுவனா் மற்றும் முதல்வராவாா். மற்றொரு நபரான விசோபாவ் சரணமாய், சவாங்கினிங் கிராம ஆணையத்தின் தலைவா் ஆவாா்.

தாக்குதலைத் தொடா்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் துறையினா், உடல்களைக் கைப்பற்றி கூறாய்வுக்கு அனுப்பிவைத்தனா். காயமடைந்த நபா் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இந்தத் தாக்குதலைக் கண்டித்து, நாகா பழங்குடியின அமைப்பு சாா்பில் சேனாபதி மாவட்டத்தில் கடையடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.

மணிப்பூரில் ஓராண்டு காலம் நீடித்த குடியரசுத் தலைவா் ஆட்சி கடந்த பிப்ரவரியில் திரும்பப் பெறப்பட்டு, மீண்டும் பாஜக ஆட்சியமைத்தது. முதல்வராக கெம்சந்த் சிங் பதவி வகித்து வருகிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.