

தேசியவாத காங்கிரஸ் இணைவு குறித்து அக்கட்சியின் நிறுவனர் சரத் பவார் விளக்கம் அளித்துள்ளார்.
மகாராஷ்டிர துணை முதல்வர் அஜீத் பவார், கடந்த 2023 ஜூலை மாதம், தேசியவாத காங்கிரஸ் தலைவரும் தனது சித்தப்பாவுமான சரத் பவாரிடம் இருந்து பிரிந்து தனி அரசியல் பயணத்தைத் தொடங்கினார். பாஜகவுடன் கூட்டணி அமைத்து மகாராஷ்டிர துணை முதல்வர் ஆனார்.
மீண்டும் தேசியவாத காங்கிரஸை இணைக்க அஜீத் பவார் விருப்பம் தெரிவித்ததாகவும் அதுகுறித்து அவர் சரத் பவாரிடம் பேசியதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், கடந்த ஜன. 28 ஆம் தேதி விமான விபத்தில் சிக்கி அஜீத் பவார் பலியானார். தொடர்ந்து அவரது மனைவி சுனேத்ரா பவார் துணை முதல்வராகியுள்ளார்.
இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களுடன் சரத் பவார் பேசியதாவது:
”சுனேத்ரா பவார் துணை முதல்வராகப் பதவியேற்றதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். தேசியவாத காங்கிரஸின் இரு பிரிவினரையும் இணைப்பது குறித்து அஜீத் பவாருக்கும் ஜெயந்த் பாட்டிலுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. அந்தப் பேச்சுவார்த்தைகளில் முதல்வர் பட்னாவிஸ் ஈடுபடவில்லை. அப்படியிருக்கையில், இணைவு பற்றிப் பேச அவருக்கு என்ன உரிமை இருக்கிறது?
தற்போது, அனைவரையும் கவனித்துக் கொள்வதிலும், துயரத்தில் இருப்பவர்களுடன் இணைந்து முன்னேறிச் செல்வதிலும்தான் எங்கள் முழு கவனமும் உள்ளது. தற்போதைக்கு, எந்தவொரு அரசியல் முடிவுகள் குறித்தும் எந்த விவாதமும் நடைபெறவில்லை” எனத் தெரிவித்தார்.
மேலும், நாடாளுமன்றத்தில் சீன எல்லை விவகாரம் குறித்து ராகுல் காந்தி பேசியது பற்றி சரத் பவார் கூறுகையில், "என் பார்வையில், ஜெனரல் நரவனே நாட்டின் ராணுவத் தளபதியாக இருந்தவர். அவர் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கும்போது, அதனை எதிர்க்கட்சித் தலைவர் அவையில் குறிப்பிடப்பட்டால், அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். அது அவரது உரிமை.
ராணுவத் தளபதி குறிப்பிடும் பட்சத்தில், அது நிச்சயமாகக் கவலைக்குரிய விஷயம். இது குறித்து விவாதிக்கப்பட்டிருந்தால், உண்மை மக்களுக்குத் தெரிந்திருக்கும்" எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.