

பிரதமர் மோடி பயந்துவிட்டார், அதனால்தான் அவர் இன்று நாடாளுமன்றத்திற்கு வரவில்லை என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.
சீன ஆக்கிரமிப்பு குறித்து கடந்த திங்கள்கிழமை மக்களவையில் பேசத் தொடங்கிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை பேசவிடாமல் ஆளும் கட்சியினர் தடுத்ததால் அவையில் அமளி ஏற்பட்டது.
முன்னாள் ராணுவத் தளபதி நரவணே எழுதிய புத்தகத்தில் உள்ள எல்லைப் பிரச்னை குறித்து ராகுல் குறிப்பிட்டிருந்தார்.
தொடர்ந்து இன்று ராகுல் காந்தி, 'பிரதமர் மோடி அவைக்கு வரும்போது அவரிடம் நரவணே எழுதிய புத்தகத்தைக் கொடுப்பேன். அவர் புத்தகத்தில் படித்தாவது தெரிந்துகொள்ளட்டும்' என்று கூறியிருந்தார்.
ஆனால், இன்று மாலை 5 மணியளவில் குடியரசுத் தலைவர் உரை மீதான தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி மக்களவையில் பேசவிருந்த நிலையில் அவர் அவைக்கு வரவில்லை. மக்களவை நாளை காலை 11 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் எம்.பி. கே.சி. வேணுகோபால் இதுபற்றி கூறுகையில்,
"பிரதமரிடம் கேளுங்கள், அவர் ஏன் இன்று வரவில்லை எனக் கேளுங்கள். இது நாடாளுமன்றமா அல்லது வேறு ஏதேனும் மையமா? பாஜக அரசு நாடாளுமன்றத்தை ஒரு கேலிக்கூத்தாக்க முயற்சிக்கிறது. நாங்கள் இதையெல்லாம் அனுமதிக்கப் போவதில்லை" என்றார்.
காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி இதுதொடர்பாக பதில் அளிக்கையில்,
"பிரதமர் மோடி பயந்துவிட்டார், அதனால்தான் அவர் இன்று அவைக்கு வரவில்லை. மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவும் பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபேவும் ஒரு புல்லட் ரயில்போல ஓடிவிட்டனர்" என்று தெரிவித்தார்.
பிரதமர் மோடி மக்களவைக்கு வராததற்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.