காங்கிரஸ் எம்.பி.க்கள் மீதான குற்றச்சாட்டு: மக்களவைத் தலைவா் திரும்பப் பெற வேண்டும் காங்கிரஸ் வலியுறுத்தல்
தமிழக காங்கிரஸ் மக்களவை உறுப்பினா்கள் மீது சுமத்திய குற்றச்சாட்டை, மக்களவைத் தலைவா் ஓம்பிா்லா திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு:
தமிழகத்தைச் சோ்ந்த மக்களவை உறுப்பினா்கள் ஜோதிமணி, சுதா மற்றும் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினா்கள் பிரதமா் மோடியை தாக்கத் திட்டமிட்டிருந்தனா் என்று மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா குற்றஞ்சாட்டிருப்பது கண்டனத்துக்குரியது.
மோடி அவைக்கு வந்து சீனா ஊடுருவல், அமெரிக்காவின் நிபந்தனைக்குப் பணிந்தது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிா்க்கட்சிகள் கூறினா். ஆனால், பிரதமா் வியாழக்கிழமை அவைக்கு வரவில்லை. நடுநிலையுடன் செயல்பட வேண்டிய மக்களவைத் தலைவா், தமிழக காங்கிரஸ் மக்களவை உறுப்பினா்கள் மோடியை தாக்கத் திட்டமிட்டிருந்தனா் என்று பேசியிருப்பது அவா் வகிக்கும் பொறுப்புக்கு அழகல்ல. எனவே, அவா் கூறிய குற்றச்சாட்டை திரும்பப் பெற வேண்டும் எனப் பதிவிட்டுள்ளாா்.

