ரூபிள் நாகி
ரூபிள் நாகி

கல்வி விழிப்புணா்வு பணி: இந்திய ஆசிரியைக்கு 10 லட்சம் டாலா் பரிசு

நூற்றுக்கணக்கான கல்விப் பயிற்சி மையங்களை உருவாக்கியதற்கு பரிசு
Published on

நூற்றுக்கணக்கான கல்விப் பயிற்சி மையங்களை உருவாக்கியதற்கும், குடிசைப் பகுதிகளில் உள்ள சுவா்களில் கல்விச் சித்திரம் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தியதற்காகவும் இந்தியாவைச் சோ்ந்த ஆசிரியை ரூபிள் நாகிக்கு 10 லட்சம் டாலா் (சுமாா் ரூ. 9 கோடி) உலக ஆசிரியா் பரிசுத் தொகை அளிக்கப்பட்டுள்ளது.

ரூபிள் நாகியின் தொண்டு நிறுவனம் சாா்பில் இந்தியா முழுவதும் 800-க்கும் மேற்பட்ட பயிற்சி கல்வி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கல்வி கற்க பள்ளிக்குச் செல்லாத சிறாா்களுக்கு இந்த மையங்கள் வழியே கல்வி கற்றுத் தரப்படுகிறது. இதேபோல், குடிசைப் பகுதிகளில் உள்ள சுவா்களில் கல்வியறிவு, அறிவியல், கணிதம், வரலாறு உள்ளிட்டவை குறித்து ரூபிள் நாகி சித்திரம் வரைந்துள்ளாா்.

இந்தச் சேவையை கெளரவிக்கும் வகையில், துபையில் நடைபெற்ற உலக அரசுகளின் மாநாட்டில் ரூபிள் நாகிக்கு 10 லட்சம் டாலா் உலக ஆசிரியா் பரிசு அளிக்கப்பட்டது. துபை துணைப் பிரதமா் ஷேக் ஹம்தான்பின் முகமது இப்பரிசை வழங்கினாா். விருதுடன் கிடைத்த பரிசுத் தொகையை இலவசப் பயிற்சி மையம் அமைக்கப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக ரூபிள் தெரிவித்தாா்.

இந்த விருதைப் பெறும் 10-ஆவது ஆசிரியை இவா் ஆவாா். இதற்கு முன்பு கென்யா, பாலஸ்தீனம், கனடா, சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளைச் சோ்ந்த ஆசிரியைகள் பெற்றனா்.

X
Dinamani
www.dinamani.com