

மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி கலைக்கப்பட்ட அடுத்த நாளே மீண்டும் வன்முறை ஏற்பட்டுள்ளதால் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.
மணிப்பூரில் குகி - மைதேயி என இரு இன மக்களிடையே நீடித்து வந்த மோதல் வன்முறையாக மாறியதைத் தொடர்ந்து நீடித்த வன்முறையால் இரண்டு ஆண்டுகளில் இருதரப்பிலும் பல உயிர்ப்பலிகள், பொருள் இழப்புகள் ஏற்பட்டன. நாடு முழுவதும் எதிர்ப்புகள் எழுந்ததால், கடந்தாண்டு பிப்ரவரியில் பிரேன் சிங் தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார்.
இதனைத் தொடர்ந்து அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் படுத்தப்பட்டது. கடந்த ஓராண்டாக மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி நீடித்து வந்த நிலையில், பாஜக நேற்று மீண்டும் ஆட்சி அமைத்தது. மணிப்பூர் வரலாற்றில் முதல்முறையாக குகி இனத்தைச் சேர்ந்த நெம்சா கிப்கென் என்ற பெண் துணை முதல்வராகவும் மற்றொரு துணை முதல்வராக, நாகா மக்கள் முன்னணியைச் சேர்ந்த லோசி டிகோ பொறுப்பேற்றுள்ளார்.
இந்த நிலையில், துணை முதல்வராகப் பதவியேற்ற குகி இனத்தைச் சேர்ந்த நெம்சா கிப்கென் மீது குகி இன போராட்டக்காரர்கள் கடும் விமர்சனங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்தப் போராட்டம் வன்முறையான நிலையில், போராட்டக்காரர்கள் பொதுச் சொத்துக்களை அடித்து உடைத்து தீவைத்தனர். இதனால், அங்கு நிலைமை மோசமடைந்தது. மேலும், குகி இனத்தவர்கள் நெம்சா கிப்கென் புகைப்படத்துடன் ‘துரோகி’ என்ற வாசகம் அடங்கிய பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மணிப்பூர் மாநிலத்தின் சுராசந்த்பூர் மாவட்டத்தில் வியாழக்கிழமை பதற்றம் அதிகரித்தது. அதைத் தொடர்ந்து துய்போங் பகுதியில் போராட்டங்கள் வெடித்தன.
போராட்டக் காரர்கள் புதிதாக அமைக்கப்பட்ட அரசுக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்தனர். பதற்றத்தைத் தடுத்து கட்டுக்குள் வைக்க பாதுகாப்புப் படை, காவல் துறை, துணை ராணுவ படைகள் அங்கு பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளன.
மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி கலைக்கப்பட்டு முதல்வர் பதவியேற்ற அடுத்த நாளே மீண்டும் வன்முறை உருவாகியுள்ளதால் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.