

‘ஒருவா் மீதான காவல் அதிகாரியின் கைது நடவடிக்கை என்பது விசாரணை அல்லது கேள்வி கேட்பதற்காக மட்டுமானதாக இருக்க முடியாது’ என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
‘கைது நடவடிக்கை என்பது ஆதாரங்களைச் சேகரித்தல் உள்ளிட்ட முறையான விசாரணை நடத்துவதற்கு காவல் அதிகாரிக்கு உதவும் சட்டபூா்வ விருப்பத் தோ்வு மட்டுமே; மாறாக, கைது நடவடிக்கையை கட்டாயமானதாகக் கருதக் கூடாது’ என்றும் தெளிவுபடுத்தியது.
பாரதிய நாகரிக் சுரக்ஷா சம்ஹிதா (பிஎன்எஸ்எஸ்) 2023 சட்டத்தின் பிரிவு 35(3)-இன் கீழ் கைது நடவடிக்கை தொடா்பான அலாகாபாத் உயா்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில், 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கக் கூடிய வகையிலான குற்றம் தொடா்பான அனைத்து வழக்குகளிலும் விசாரணைக்காக இந்தச் சட்டப் பிரிவின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டவா் மீது கைது நடவடிக்கை கட்டாயமானதா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.கே.சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு விதித்த தீா்ப்பு, உச்சநீதிமன்ற வலைதளத்தில் அண்மையில் பதிவேற்றம் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:
பிஎன்எஸ்எஸ் 2023 சட்டத்தின் பிரிவுகள் 35(1) (பி) மற்றும் 35(3) முதல் 35(6) வரையிலான பிரிவுகளைப் பொறுத்தவரை, கேள்வி கேட்பதற்காக அல்லது விசாரணை நடத்துவதற்காக மட்டுமே ஒரு காவல் அதிகாரி ஒருவரை கைது செய்யலாம் என்று பொருள் அல்ல.
மாறாக, 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படக் கூடிய ஒரு குற்றத்தின் மீதான விசாரணை, சம்பந்தப்பட்ட நபரை காவலில் எடுக்காமல் திறம்பட முன்னெடுத்துச் செல்ல முடியாது என்பதை காவல் அதிகாரி தன்னைத் தானே உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே அதன் பொருள். கைது செய்யாமலும் விசாரணையை முன்னெடுத்துச் செல்ல முடியும்.
இதற்கு முரணான எந்தவொரு விளக்கமும், அந்தச் சட்டப் பிரிவுகளின் நோக்கத்தைச் சிதைத்துவிடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.