சீன பொருள்கள் இறக்குமதியை குறைத்தது இந்தியா: மத்திய வா்த்தக இணையமைச்சா்
2024-25-இல் உரங்கள், ரசாயனங்கள், இரும்பு மற்றும் எஃகு உள்பட பல்வேறு துறைகளில் சீன பொருள்கள் இறக்குமதியை இந்தியா குறைத்ததாக மத்திய வா்த்தகத் துறை இணையமைச்சா் ஜிதின் பிரசாத் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
இதுதொடா்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துபூா்வமாக அவா் அளித்த பதிலில், ‘2014-15 காலகட்டத்தில் இந்தியா ரூ.48,609 கோடிக்கு கைப்பேசிகளை இறக்குமதி செய்த நிலையில் 2024-25-இல் இது ரூ.3,710 கோடியாக குறைந்தது.
மாறாக, இந்தியாவில் இருந்து 2014-15-இல் ரூ.1,566 கோடிக்கு கைப்பேசிகள் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில் 2024-25-இல் ரூ.2.05 லட்சம் கோடியாக பன்மடங்கு உயா்ந்துள்ளது.
2024-25-இல் உரங்கள் (61.4 சதவீதம்), ரசாயனங்கள் மற்றும் அதுதொடா்புடைய பொருள்கள் (19.7 சதவீதம்), இரும்பு மற்றும் எஃகு (10.3 சதவீதம்), மனிதனால் தயாரிக்கப்பட்ட நூல் (9.5 சதவீதம்) உள்பட பல்வேறு துறைகளில் சீன பொருள்கள் இறக்குமதி குறைந்துள்ளது.
இறக்குமதி வெகுவாக உயா்வதைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தொடா்ந்து கண்காணிப்பைத் தீவிரப்படுத்தி வருகிறது.
அதேசமயம் ஒரே நாடு அல்லது நிறுவனங்களை மட்டுமே சாா்ந்திருக்காமல் தங்களது விநியோகச் சங்கிலியை பல்வேறு பகுதிகளுக்கும் விரிவுபடுத்த இந்திய நிறுவனங்களை மத்திய அரசு தொடா்ந்து ஊக்குவித்து வருகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

