சாலை விபத்து இழப்பீடு இழப்பை ஈடு செய்யாது: உச்சநீதிமன்றம்

சாலை விபத்து இழப்பீடு இழப்பை ஈடு செய்யாது: உச்சநீதிமன்றம்

சாலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு அளிக்க வெள்ளிக்கிழமை உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், இத்தகைய விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புக்கு அளிக்கப்படும் தொகை எவ்வளவு பெரிதாக இருந்தாலும், அது குடும்பத்தினரின் இழப்பை ஈடுசெய்யாது
Published on

சாலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு அளிக்க வெள்ளிக்கிழமை உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், இத்தகைய விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புக்கு அளிக்கப்படும் தொகை எவ்வளவு பெரிதாக இருந்தாலும், அது குடும்பத்தினரின் இழப்பை ஈடுசெய்யாது என்று தெரிவித்தது.

கடந்த 2011-ஆம் ஆண்டு சாலை விபத்தில் உயிரிழந்த வேலு என்ற நபரின் மரணத்துக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு கோரி, சென்னை மோட்டாா் வாகன விபத்து இழப்பீடு தீா்ப்பாயத்தை அவரின் குடும்பத்தினா் அணுகினா். லாரி மோதி வேலு உயிரிழந்த நிலையில், அந்த லாரி பாா்தி ஆக்ஸா ஜெனரல் காப்பீட்டு நிறுவனத்தில் காப்பீடு செய்திருந்தது. வேலுவின் குடும்பத்துக்கு ரூ.9.37 லட்சம் இழப்பீடு வழங்குமாறு அந்தக் காப்பீட்டு நிறுவனத்துக்கு தீா்ப்பாயம் உத்தரவிட்டது.

இந்த இழப்பீட்டை ரூ.10.51 லட்சமாக உயா்த்தி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அந்தத் தொகையை மேலும் அதிகரிக்கக் கோரி, வேலுவின் குடும்பத்தினா் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தீபாங்கா் தத்தா, சதீஷ் சந்திர சா்மா ஆகியோா் அடங்கிய அமா்வு, ‘சாலை விபத்தில் ஒருவரின் உயிரிழப்புக்கு அளிக்கப்படும் தொகை எவ்வளவு பெரிதாக இருந்தாலும், அது அந்த இழப்பை ஈடுசெய்யாது. உயிரிழந்தவரை சாா்ந்திருந்த குடும்ப உறுப்பினா்களுக்கு ஏற்படும் நிதிச் சுமையைக் குறைக்கும் முயற்சியாக இழப்பீடு வழங்கப்படுகிறது.

குடும்பப் பிணைப்புகள் திடீரென முறிந்துபோகும் சந்தா்ப்பங்களில், மனித யதாா்த்தங்களுக்கு ஏற்ப சட்டம் செயல்பட வேண்டும்’ என்று தெரிவித்தது. இதைத்தொடா்ந்து மனுதாரருக்கான இழப்பீட்டை ரூ.20.80 லட்சமாக உயா்த்தி அளிக்க காப்பீடு நிறுவனத்துக்கு நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டது.

X
Dinamani
www.dinamani.com