

காதலியுடன் சுற்றித்திரிந்த மகனை நேரில் கண்ட தாய், அப்பெண்ணுடன் திருமண நிச்சயத்தையே முடித்துள்ளார்.
காதலியுடன் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்த மகனைக் கண்ட தாய், அந்த இடத்திலேயே பெண்ணுடன் திருமண நிச்சயத்தை முடித்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
வீட்டிற்காக வாங்கிச் சென்ற பழங்களை அப்பெண்ணுடன் பரிமாறி, இனிப்பு ஊட்டிவிட்டு பாரம்பரிய முறைப்படி திருமண நிச்சயம் முடிந்துவிட்டதாகக் கூறியுள்ளார். இதனை விடியோ பதிவும் செய்துள்ளனர்.
சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் விடியோவில், மகன் தனது காதலியுடன் மெட்ரோ ரயில் நிலையத்தில் அமர்ந்துள்ளார். கணவருடன் வெளியே சென்றுவிட்டு வீட்டிற்குத் தேவையான பொருள்களுடன் சென்றுக்கொண்டிருக்கும்போது பெண்ணுடன் அமர்ந்திருக்கும் மகனைக் கண்டு தாய் அதிர்ச்சி அடைகிறார்.
மகனிடம் விசாரித்து அவரைக் கண்டிக்கிறார். பின்னர் வாங்கிச் சென்ற பழங்கள், பூக்களை அப்பெண்ணிடம் கொடுத்துவிட்டு அவர்களுக்கு இனிப்பு ஊட்டுகிறார். பாரம்பரிய முறைப்படி திருமண நிச்சயம் முடிந்துவிட்டதாகக் கூறி அவர்களை ஆசிர்வாதம் செய்கிறார். தந்தையும் இருவரையும் ஆசிர்வாதம் செய்கிறார்.
ஆனால், மகன் தாயை கட்டுப்படுத்த முயற்சிக்கிறார். நமது குடும்ப கெளரவம் என்ன ஆவது? என மகனிடம் தாய் கடிந்துகொள்கிறார். இதனை அங்கிருந்த ஒருவரை விடியோ எடுக்கும்படி தாய் கூறியுள்ளார். அதுவும் விடியோவில் பதிவாகியுள்ளது.
இந்த விடியோவின் முடிவில் மகனும் காதலியும் தந்தையின் காலில் விழுந்து ஆசி பெறுகின்றனர். இந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
அப்பெண் மிகவும் பாக்கியசாலி என்றும், மகனை நல்வழிப்படுத்தும் நோக்கத்தில் கண்டிப்பதாகவும் பெண் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என நினைப்பதாக பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
மெட்ரோ ரயில் நிலையத்தில் எடுக்கப்பட்ட இந்த விடியோ பார்ப்பதற்கு திட்டமிட்டு எடுத்தது போலத் தெரிவதாகவும், உண்மையானது அல்ல எனவும் சிலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.