

தன் மீது அவதூறு பரப்பியதாக காங்கிரஸ் தலைவர்கள் மீது அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதுகுறித்து ஹிமந்த பிஸ்வா சர்மா தனது எக்ஸ் பக்கத்தில், "என் மீது பொய்யான, ஏற்கத்தகாத மற்றும் அவதூறுகளைப் பரப்பும் குற்றச்சாட்டுகளை செய்தியாளர்கள் சந்திப்பில் காங்கிரஸ் தலைவர்களான ஜிதேந்திர சிங், பூபேந்திர பகேல், கௌரவ் கோகோய் ஆகியோர் கூறியுள்ளனர்.
ஆகையால், என் மீது அவதூறான கருத்துகளைத் தெரிவித்ததற்காக, அவர்கள் மீது ரூ. 500 கோடி இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் கௌரவ் கோகோய்க்கு, பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பிருப்பதாகக் குற்றம் சாட்டிய சர்மா, கோகாயின் மனைவி எலிசபெத் கோல்பர்னுக்கும் பாகிஸ்தான் நாட்டவரான அலி தௌகீர் ஷேக் ஆகியோருக்கும் இடையே ஆழமான தொடர்பு இருப்பதாகவும் பரபரப்பான குற்றச்சாட்டையும் கூறினார்.
இதனைத் தொடர்ந்து, சர்மாவுக்கு பதிலளித்த கோகோய், "இதுகுறித்த சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கை, பாகிஸ்தானுடன் தொடர்புபடுத்தும் குற்றச்சாட்டுகளை நிரூபிக்கத் தவறியதால், 6 மாதங்களாக மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது. ஏனெனில், சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கையால் சர்மாவின் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியவில்லை.
சர்மாவின் குடும்பத்தினரிடம் 12,000 பிகா நிலம் இருப்பதை நாங்கள் வெளிப்படுத்தியதால்தான், அவர் இவ்வாறு நாடகம் ஆடுகிறார்.
இப்போது, என்னுடைய குழந்தைகளையும் அரசியல் பேச்சில் இழுக்கும் அளவுக்கு தரந்தாழ்ந்து விட்டார் சர்மா. அவரது குழந்தைகள் குறித்து அனைவருக்கும் தெரியும். ஆனால், நாங்கள் குடும்பங்களை அரசியலுக்குள் இழுப்பதில்லை" என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.