

இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தை மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
மக்களவையில் நடைபெற்று வரும் பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்று, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி புதன்கிழமை உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:
“நாம் தீவிரமடைந்து வரும் புவிசார் அரசியல் மோதல்கள் நிறைந்த உலகில் வாழ்ந்து வருகிறோம். அமெரிக்காவின் ஆதிக்கத்துக்கு சீனா, ரஷியா மற்றும் பிற சக்திகள் சவால் விடுகின்றன.
போர் சகாப்தம் முடிந்துவிட்டதாக பிரதமர் மோடியும், பாதுகாப்பு ஆலோசகரும் சில நாள்களுக்கு முன் தெரிவித்தார்கள். ஆனால், நாம் போர் சகாப்தத்துக்கு மத்தியில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உக்ரைன், காஸா, மத்திய கிழக்குகளில் போர் நடைபெற்று வருகின்றன. ஈரானில் போர் அச்சுறுத்தல் இருக்கிறது. நாமும் ஆபரேஷன் சிந்தூரை சந்தித்தோம்.
டாலருக்கும், அமெரிக்க மேலாதிக்கத்துக்கும் சவால் செய்யப்படுகிறது. அமெரிக்காவுக்கும், சீனாவுக்கு இடையிலான போட்டியில், மிகவும் மதிப்புமிக்க ஒரு சொத்து இந்திய தரவுகள் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். அமெரிக்கா வல்லரசாக தொடர விரும்பினால், டாலரைப் பாதுகாக்க விரும்பினால், அதற்கான வழி இந்தியர்கள்தான்.
மக்கள்தொகை கூடுவது சுமை என்றும், பேரழிவு என்றும் பலர் சொல்கிறார்கள். ஆனால், மக்கள்தொகை தான் நம்மிடம் இருக்கக் கூடிய மிகப்பெரிய சொத்து. அது நமது பலம்.
நாங்கள் டிரம்பிடம் பேச்சுவார்த்தை நடத்தினால், முதலில் கூறுவது, சமமாக பேச வேண்டும், உங்களின் ஊழியர்களை போல் நடத்தக் கூடாது. இரண்டாவது எங்களின் எரிசக்தி பாதுகாப்பை நாங்கள் உறுதி செய்வோம். அடுத்து, உங்கள் விவசாயிகளை நீங்கள் பாதுகாக்க வேண்டும் என்பது புரிகிறது. ஆனால், நாங்கள் எங்களின் விவசாயிகளை பாதுகாப்போம்.
நீங்கள் இந்தியாவை விற்றுவிட்டீர்கள். இந்தியாவை விற்றதில் உங்களுக்கு வெட்கமாக இல்லையா? நீங்கள் பாரத மாதாவை விற்றுவிட்டீர்கள். பிரதமர் இதெல்லாம் பலனின்றி செய்ய மாட்டார். அவர் ஏன் இந்தியாவை விற்றார் என்பது அனைவருக்கும் தெரியும். அவரது கழுத்தை நெறித்திருக்கிறார்கள். பிரதமரின் கண்களில் பயத்தை காணலாம். எப்ஸ்டீன் கோப்புகளில் இன்னும் வெளிவராத 30 லட்சம் பக்கங்கள் இருக்கின்றன.
அனில் அம்பானி என்ற ஒரு தொழிலதிபர் இருக்கிறார், அவர் ஏன் இன்னும் சிறையில் அடைக்கப்படவில்லை? காரணம், எப்ஸ்டீன் கோப்புகளில் அவரது பெயர் உள்ளது. அவரை எப்ஸ்டீனுக்கு அறிமுகப்படுத்திய ஹர்தீப் புரியிடமும் நான் கேட்க விரும்புகிறேன். அவரை யார் அறிமுகப்படுத்தினார்கள் என்பது எனக்குத் தெரியும், ஹர்தீப் புரியிடமும் அவரை யார் அறிமுகப்படுத்தினார்கள் என்பது எனக்குத் தெரியும்” எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.