

இந்தியா - அமெரிக்கா இடையிலான வணிக ஒப்பந்தத்தில் வெள்ளை மாளிகை சில திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.
இரு நாடுகளுக்கு இடையிலான வணிக ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள் அடங்கிய ஆவணம் திங்கள்கிழமை வெளியான நிலையில், அதில் சில திருத்தங்களை அமெரிக்கா தற்போது மேற்கொண்டுள்ளது.
வணிக ஒப்பந்த ஆவணத்தில் கவனக்குறைவாக சேர்க்கப்பட்ட சில சொற்களை ஏற்க இருதரப்பிலும் மறுப்பு தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, இறக்குமதி வரிகள் குறைப்பு அல்லது நீக்கப்பட்ட உணவுப் பொருள்களின் பட்டியலில் சில பருப்பு வகைகளை நீக்குதல் மற்றும் டிஜிட்டல் சேவை வரிகளை நீக்குதல் என சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
என்னென்ன திருத்தங்கள்?
முக்கியத் தகவல்களைச் சுருக்கமாக, பெரும்பாலும் ஒரே பக்கத்தில் வழங்கும் ஆவணத்தை உண்மைத் தாள் என்பார்கள். அந்தவகையில் இந்தியா - அமெரிக்கா இடையிலான வணிக ஒப்பந்த உண்மைத் தாளில் விவசாய விளைப் பொருள்களான, சில பருப்பு வகைகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
அதாவது இறக்குமதி வரியைக் குறைப்பதாக இந்தியா ஒப்புக்கொண்ட பல பண்ணை மற்றும் உணவுப் பொருள்களுடன் சில பயறு மற்றும் பருப்பு வகைகள் சேர்க்கப்பட்டிருந்தன. இதில் குறிப்பிட்ட பருப்பு வகைகள் திருத்தப்பட்ட அறிக்கையில் நீக்கப்பட்டுள்ளன.
முன்பு வெளியான அறிக்கையில், தானியங்கள், சிவப்பு சோளம், மரக் கொட்டைகள், சோயாபீன் எண்ணெய், ஒயின், மதுபானங்கள் மற்றும் சில பருப்பு வகைகள் இருந்தன.
உலகின் அதிக உற்பத்தி மற்றும் நுகர்வோர் கொண்டுள்ள நாட்டில் பருப்புப் பொருள்கள், பயறு வகைகள், குறிப்பாக கொண்டைக் கடலை, உலர் பீன்ஸ் பருப்புகள் போன்றவை அரசியல் ரீதியாக மிகுந்த இணக்கமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இரண்டாவது, இந்தியா அதன் டிஜிட்டல் சேவை வரிகளை நீக்கும் என்ற கூற்றையும் வெள்ளை மாளிகை நீக்கியுள்ளது. திருத்தப்பட்ட கூற்றுகள் இந்திய டிஜிட்டல் வர்த்தக விதிகளுக்குட்பட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்றாவதாக, அமெரிக்காவின் எரிசக்தி மற்றும் தொழில்நுட்பப் பொருள்களை 500 பில்லியன் டாலர் மதிப்பிற்கு வாங்க இந்தியா உத்தேசித்துள்ளது (intends to buy) என மாற்றப்பட்டுள்ளது.
முன்பு வெளியிடப்பட்ட அறிக்கையில், 500 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருள்களை வாங்க உறுதி அளித்துள்ளது (committed to buy) என இருந்த நிலையில், அந்த வார்த்தை தற்போது, உத்தேசித்துள்ளது என மாற்றப்பட்டுள்ளது.
ஒப்பந்தத்தின்படி, அடுத்த 5 ஆண்டுகளில் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு 500 பில்லியன் டாலா் (சுமாா் ரூ.45 லட்சம் கோடி) மதிப்பிலான பொருள்களை ஏற்றுமதி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் வரும் மார்ச் மாத நடுப்பகுதியில் அதிகாரப்பூர்வமாக கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் இந்தத் திடீர் திருத்தங்கள் குறித்து இந்தியத் தரப்பிலிருந்து இன்னும் அதிகாரப்பூர்வமான விளக்கங்கள் ஏதும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.