தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பிழைகள்! சரிசெய்து வழங்க ஓம் பிர்லா அறிவுரை!

ஓம் பிர்லாவுக்கு எதிராக காங்கிரஸ் வழங்கிய நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பிழைகள் பற்றி...

News image
ஓம் பிர்லா
Updated On :11 பிப்ரவரி 2026, 6:36 am

இணையதளச் செய்திப் பிரிவு

நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு எதிராக காங்கிரஸ் தாக்கல் செய்த நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸில் பிழைகள் இருப்பதாக மக்களவை செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இருப்பினும், நோட்டீஸை நிராகரிக்க வேண்டாம் என்றும், பிழைகளை சரிசெய்து திரும்பப் பெற்று நடவடிக்கைகளை விதிகளின்படி தொடருமாறும் ஓம் பிர்லா மக்களவை செயலகத்துக்கு அறிவுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜன. 28 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது நடைபெற்ற விவாதத்தில், சீன விவகாரம் குறித்து பேசுவதற்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு ஓம் பிர்லா அனுமதி மறுத்தார்.

இதனிடையே, பிப். 4 ஆம் தேதி அன்று இந்த தீர்மானத்திற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்து உரையாற்றுவார் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் பிரதமர் மோடி அன்று அவைக்கு வரவில்லை.

'பிரதமர் மோடியை நான்தான் வர வேண்டாம் என்று கூறினேன், அவருக்கு எதிராக எதிர்க்கட்சி பெண் எம்.பி.க்கள் சதி செய்யத் திட்டமிட்டிருந்தனர்' என்று அவைத் தலைவர் ஓம் பிர்லா தெரிவித்தார். பெண் எம்.பி.க்கள் குறித்து கருத்து தெரிவித்ததால் ஓம் பிர்லாவுக்கு எதிர்க்கட்சி தரப்பில் கண்டனங்கள் எழுந்தன.

இந்த நிலையில், ஓம் பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸை காங்கிரஸ் கட்சியினர் மக்களவை செயலகத்தில் செவ்வாய்க்கிழமை வழங்கினர்.

இந்த நோட்டீஸில் பிப்ரவரி 2026 என்பதற்கு பதிலாக நான்கு இடங்களில் பிப்ரவரி 2025 என்று குறிப்பிடப்பட்டிருப்பதாகவும், விதிகளின்படி, இந்த நோட்டீஸை மக்களவை செயலகம் நிராகரிக்கக் கூடும் என்றும் தகவல்கள் வெளியாகின.

இருப்பினும், நோட்டீஸை நிராகரிக்க வேண்டாம் என்றும், பிழையைத் திருத்தம் செய்து வாங்கி விதிகளின்படி அடுத்தக்கட்ட நடவடிக்கையைத் தொடருமாறும் மக்களவை செயலகத்துக்கு ஓம் பிர்லா அறிவுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில், காங்கிரஸ் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் தற்போதைய முதல்கட்ட அமர்வில் விவாதத்துக்கு வர வாய்ப்பில்லை எனத் தெரிகின்றது.

மார்ச் மாதம் தொடங்கவுள்ள பட்ஜெட் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வில்தான் நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்துக்கு பட்டியலிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.