

வந்தே பாரத் ஏசி இருக்கைகளின் கட்டணம், சீனா, ஜப்பான், பிரேசில் நாடுகளைவிட குறைவானதுதான் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.
வந்தே பாரத் ரயில்களின் கட்டண அமைப்பு குறித்த கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த அஸ்வினி வைஷ்ணவ், "பல்வேறு வகையான பயணிகள் சேவைகளின் கட்டண அமைப்பைத் தீர்மானிக்கும்போது, சேவையின் விலை, சேவையின் மதிப்பு, வழங்கப்படும் சேவைகள் மற்றும் வசதிகள், மலிவு, சமூக - பொருளாதார கருத்துகள் போன்றவற்றை ரயில்வே அமைச்சகம் கருத்தில் கொள்கிறது.
300 முதல் 400 கிலோமீட்டர் பயணத்துக்கான வந்தே பாரத் ஏசி இருக்கைக்கான கட்டணம், கிலோமீட்டருக்கு சுமார் ரூ. 2.19 மட்டுமே. இது சீனா, ஜப்பான், பிரான்ஸ் போன்ற நாடுகளில் இதேபோன்ற சேவைகளுக்கான கட்டணங்களைவிட மிகக் குறைவு. இந்த நாடுகளில், கட்டணம் கிலோமீட்டருக்கு ரூ. 7 முதல் ரூ. 20 வரை இருக்கும்.
2019 பிப்ரவரியில் அறிமுகப்படுத்தப்பட்ட வந்தே பாரத் சேவைகள், தற்போது 82 வழித்தடங்களில் 164 ரயில் சேவைகளுடன் இயங்கி வருகிறது.
மலிவு விலையைக் கருத்தில்கொண்டு, இந்த ரயில்களின் கட்டண அமைப்பானது சேவை செலவைவிட குறைவாக வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், நாடு முழுவதும் இந்தச் சேவைகளை விரிவுபடுத்த உதவியது" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், சாதாரண வகுப்பு கட்டணங்களையும் அண்டை நாடுகளுடன் ஒப்பிட்டு, இந்தியாவில் ஒரு கிலோமீட்டருக்கு 20 பைசாவும், பாகிஸ்தானில் 54 பைசாவும், வங்கதேசத்தில் 37 பைசாவும், இலங்கையில் 51 பைசாவும் என்ற நிலையில் இருப்பதாக அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.