

மக்களவையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்ததற்காக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் தாக்கல் செய்வோம் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக மக்களவையில் புதன்கிழமை உரையாற்றிய ராகுல் காந்தி, எப்ஸ்டீன் கோப்புகளுடன் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரியை தொடர்புபடுத்தி பேசினார்.
இதுகுறித்து செய்தியாளர்களுடன் பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்ததாவது:
”மக்களவையை ராகுல் காந்தி தவறாக வழிநடத்தியதற்காகவும், ஆதாரமற்ற தகவல்களை வெளியிட்டதற்காகவும் அவருக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் தாக்கல் செய்ய உள்ளோம். மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டிலும் அலுவல்களை நடத்துவதற்கு தெளிவான விதிகள் மற்றும் நடைமுறைகள் உள்ளன. ஒரு உறுப்பினர் மற்றொரு உறுப்பினர் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்த விரும்பினால், நீங்கள் நோட்டீஸ் கொடுத்து குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும்.
மத்திய அரசு மற்றும் பிரதமருக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளை ராகுல் காந்தி முன்வைத்துள்ளார். பிரதமர் இந்தியாவை விற்றுவிட்டதாக கூறியுள்ளார். மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மீதும் எந்த அறிவிப்பும் கொடுக்காமல் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
தவறான அறிக்கைகள், தவறான கூற்றுக்கள் மற்றும் நாடாளுமன்றத்திற்கு புறம்பான வார்த்தைகள் உட்பட அவரது உரை மக்களவை குறிப்பில் இருந்து நீக்கப்பட வேண்டும்.
இந்த நாட்டை யாராலும் விற்க முடியாது, யாராலும் வாங்க முடியாது என்பதை நான் அவருக்கு நினைவூட்டினேன். ஆனாலும், யாரோ ஒருவர் இந்தியாவை விற்றுவிட்டதாகவும், யாரோ ஒருவர் இந்தியாவை வாங்கியதாகவும் ராகுல் காந்தி கூறினார். இந்தியாவை வாங்குவதையோ விற்பதையோ யாராலும் கற்பனை கூட செய்ய முடியாது” எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.