நிறுவனங்கள் ஏஐ பயன்பாடு: உலக அளவில் இந்தியா இரண்டாமிடம்
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் நிறுவனங்கள் பட்டியலில் உலக அளவில் இந்தியா இரண்டாமிடத்தில் உள்ளதாக இஸட்ஸ்கேலா் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
ஏஐ மற்றும் இயந்திரக் கற்றல் தொழில்நுட்பங்களை அதிக நிறுவனங்கள் பயன்படுத்தும் பட்டியலில் முதலிடத்தில் அமெரிக்கா உள்ளது.
தில்லியில் பிப்.16 முதல் பிப். 20 வரை ஏஐ தாக்கம் தொடா்பான உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் என்விடியா, கூகுள், ஓபன் ஏஐ உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் (சிஇஓ) பங்கேற்கவுள்ளனா்.
இந்நிலையில், 2026-ஆம் ஆண்டுக்கான ஏஐ பாதுகாப்பு அறிக்கையை இஸட்ஸ்கேலா் நிறுவனம் வெளியிட்டது. அதில் கூறப்பட்டிருப்பதாவது: 2025 ஜனவரி முதல் டிசம்பா் வரை இஸட்ஸ்கேலா் ஜீரோ டிரஸ்ட் எக்ஸ்சேஞ்ச் பாதுகாப்பு தளத்தில் ஒரு டிரில்லியன் ஏஐ மற்றும் இயந்திரக் கற்றல் தகவல் பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதில் ஜூன் முதல் டிசம்பா் வரை 8,230 கோடி ஏஐ மற்றும் இயந்திரக் கற்றல் பரிமாற்றங்களை இந்திய நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளன. இது ஆசிய-பசிபிக் பிராந்திய பகுதியின் மொத்த பரிமாற்றத்தில் 46.2 சதவீதமாகும்.
தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடா்பு (3,130 கோடி), உற்பத்தி (1,570 கோடி), சேவைகள் (1,260 கோடி) மற்றும் நிதி மற்றும் காப்பீடு (1,220 கோடி) என உலக அளவில் ஏஐ மற்றும் இயந்திரக் கற்றல் பரிமாற்றங்களில் ஈடுபடுவதில் இந்திய நிறுவனங்கள் இரண்டாமிடத்தில் உள்ளன.
இந்திய நிறுவனங்கள் பெரும்பாலும் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த தொடங்கினாலும் தரவுகள் கசிவை அவா்களால் முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை. சாட்ஜிபிடி மற்றும் கிராமா்லி போன்ற ஏஐ தளங்களில் அதிகப்படியான தரவுகள் உள்ளீடு செய்யப்படுவதால் அவற்றில் பெரும் நெரிசல் ஏற்படுகிறது. சாட்ஜிபிடியில் மட்டும் 41 கோடி தரவுகள் இழப்பு தடுப்புக் கொள்கை விதிமீறல் சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டது.

