

பிரபல பாலிவுட் பாடகர் உதித் நாராயணன் மீது பிகார் காவல் நிலையத்தில் அவரது முன்னாள் மனைவி ரஞ்சனா புகார் அளித்துள்ளார்.
கடந்த 1984 ஆம் ஆண்டு பாடகர் உதித் நாராயணனுக்கும் ரஞ்சனாவுக்கு திருமணம் ஆனது. பின்னர், சில மாதங்களில் மும்பையைச் சேர்ந்த தீபா என்ற பெண்னை அவர் மறுமணம் செய்துகொண்டார்.
இந்த நிலையில், உதித் நாராயணன், அவரது இரண்டு சகோதரர்கள் மற்றும் இரண்டாவது மனைவிக்கு எதிராக பிகார் மாநிலத்தில் உள்ள மகளிர் காவல் நிலையத்தில் ரஞ்சனா புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
”1984 டிசம்பர் 7 ஆம் தேதி ஹிந்து திருமண முறைப்படி, உதித் நாராயணன் என்னை திருமணம் செய்துகொண்டார். சில நாள்களில் தனது பணிக்காக மும்பை சென்றவர், அங்கு தீபா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார் என்பது ஊடக செய்தி வாயிலாக எனக்கு தெரிந்தது.
கடந்த 1996 ஆம் ஆண்டு, உதித் நாராயணன், அவரது இரண்டாவது மனைவி மற்றும் இரண்டு சகோதரர்கள் என்னை தில்லியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு எனக்கு தெரிவிக்காமலேயே கருப்பை அகற்ற அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதுகுறித்து பல ஆண்டுகளுக்குப் பிறகே எனக்கு தெரியும்.
இவர்கள் உடல் மற்றும் மன ரீதியில் என்னை துன்புறுத்தினார்கள். பலமுறை எனக்கு நிதியுதவி வழங்குவதாக வாக்குறுதி அளித்தும் அவர் நிறைவேற்றவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று காவல் நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த புகார் தொடர்பாக இதுவரை உதித் நாராயணன் தரப்பில் இருந்து எவ்வித விளக்கமும் அளிக்கப்படவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.