

மேற்கு வங்கத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மருத்துவ மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
பிகார் மாநிலம், பாட்னாவைச் சேர்ந்த மருத்துவ மாணவி லாவண்யா பிரதாப்(21). இவர் மேற்கு வங்கத்தின் துர்காபூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் இரண்டாம் ஆண்டு பயின்று வந்தார். சனிக்கிழமை இரவு மாணவி, விடுதி கழிப்பறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். முதற்கட்ட விசாரணையில் மரணம் தற்கொலையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
உடற்கூராய்வுக்குப் பிறகே சரியான காரணம் உறுதி செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் துர்காபூர் விரைந்தனர். சமீபத்திய செமஸ்டர் தேர்வுகளில் மாணவி ஒரு பாடத்தில் தோல்வியடைந்ததாகவும், மன அழுத்தத்தில் இருந்ததாகவும் வந்த செய்திகளையும் போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும் விசாரணையின் ஒரு பகுதியாக, வகுப்பு தோழர்கள் மற்றும் விடுதியில் உள்ளவர்களிடமும் அதிகாரிகள் பேசியுள்ளனர். கடந்த ஆண்டு அக்டோபரில் ஒடிசாவைச் சேர்ந்த அதே மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர், தனது ஆண் நண்பருடன் வெளியே சென்றிருந்தபோது, கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் கூறப்படுகிறது.
இந்த வழக்கில் நண்பரையும் மேலும் ஐந்து குற்றவாளிகளையும் போலீஸார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.