

பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரானை பிரதமர் நரேந்திர மோடி இன்று (பிப். 17) சந்தித்தார்.
இந்தச் சந்திப்பின்போது இரு நாடுகளிடையேயான பாதுகாப்பு, வணிகம் உள்ளிட்ட துறைகள் சாா்ந்த ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. மேலும், பிராந்திய மற்றும் சர்வதேச அளவில் நிலவும் பிரச்னைகள் குறித்துப் பேசவும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
மும்பையில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்பட பிரான்ஸ் நாட்டு முக்கிய அதிகாரிகள் உடன் இருந்தனர்.
பேச்சுவார்த்தைக்கு முன்னதாக 2008 நவம்பர் மாதம் நடந்த மும்பை தாக்குதலில் பலியானோருக்கு தனது மனைவி பிரிகேட் மேக்ரானுடன் சேர்ந்து இமானுவல் மேக்ரான் அஞ்சலி செலுத்தினார். இதனைத்தொடர்ந்து பாலிவுட் திரை நட்சத்திரங்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினார்.
தில்லியில் நடைபெற்று வரும் செயற்கை நுண்ணறிவு தாக்கம் தொடா்பான ஏஐ உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக 3 நாள்கள் பயணமாக இமானுவல் மேக்ரான் இந்தியாவுக்கு வருகைப் புரிந்துள்ளார்.
இதனிடையே பிரான்ஸ் அதிபர் மேக்ரானை சந்தித்தது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டுள்ளதாவது:
''மும்பையில் எனது நண்பர், பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரானை சந்திப்பது மகிழ்ச்சி. மும்பை நகரத்தை மிகவும் விரும்புவதாகவும், காலை நடைப் பயிற்சியை மகிழ்ச்சியுடன் மேற்கொண்டதாகவும் மேக்ரான் கூறினார்'' என பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.