

இந்தியாவுக்கு வருகைப்புரியுமாறு வங்கதேசத்தின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள தாரிக் ரஹ்மானுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் பரஸ்பரமாக இணக்கமான நேரம் அமையும்போது இந்தியாவுக்கு வருகைத்தர வேண்டும் என தாரிக் ரஹ்மானுக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, டாக்டர் சுபைதா ரஹ்மான் மற்றும் உங்கள் மகள் ஜைமாவுடன், பரஸ்பரம் வசதியான நேரத்தில் இந்தியாவுக்கு வருகை தர உங்களை அழைக்கிறேன். இந்தியாவில் உங்களுக்கு அன்பான வரவேற்பு காத்திருக்கிறது.
உங்கள் நல்ல ஆரோக்கியத்திற்கும் வெற்றிக்கும், வங்கதேச மக்களின் தொடர்ச்சியான முன்னேற்றத்திற்கும் செழிப்பிற்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் எனக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
தேர்தலில் நீங்கள் அடைந்துள்ள வெற்றியானது, வங்கதேச மக்கள் உங்கள் தலைமையின் மீது வைத்திருக்கும் அன்பு மற்றும் நம்பிக்கைக்கு சான்றாகும்.
மேலும், நாட்டை அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்புப் பாதையில் முன்னோக்கி அழைத்துச் செல்வதற்கான உங்கள் தொலைநோக்குப் பார்வைக்கு சான்று எனக் குறிப்பிட்டுள்ளார்.
வங்கதேசத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில், மொத்தமுள்ள 297 இடங்களில் 209-ல் இடங்களில் மறைந்த முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசியவாத கட்சி (பிஎன்பி) வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது.
வங்கதேச தேசியவாத கட்சியின் நாடாளுமன்றத் தலைவராக தாரிக் ரஹ்மான் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து, தாரிக் ரஹ்மான் தலைமையிலான 25 அமைச்சர்கள் மற்றும் 24 இணையமைச்சர்கள் கொண்ட அமைச்சரவைக் குழு அறிவிக்கப்பட்டது.
நாடாளுமன்றக் கட்டடமான ஜதிய சங்கசத் பவனில் இன்று (பிப். 17) மாலை நடைபெற்ற விழாவில் தாரிக் ரஹ்மான் வங்கதேசத்தின் புதிய பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டார். அந்நாட்டின் அதிபர் முகமது சகாபுதீன் தாரிக் ரஹ்மானுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.