

உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத ஒன்றை இந்தியா கட்டமைத்துள்ளதாக பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.
தில்லி பாரத மண்டபத்தில் நடைபெறும் செய்யறிவு (ஏஐ) தாக்கம் தொடா்பான உச்சிமாநாட்டின் தொடக்க விழாவில் கலந்துகொண்ட பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் சிறப்புரை ஆற்றினார்.
அப்போது, நமஸ்தே என்று தனது உரையைத் தொடங்கிய இமானுவேல் மேக்ரான், இந்த அற்புதமான நகருக்கு எங்களை வரவேற்றதற்கு நன்றி எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் பேசியதாவது:
”10 ஆண்டுகளுக்கு முன்பு, மும்பையில் சாலையோர வியாபாரி ஒருவரால் வங்கிக் கணக்குகூட தொடங்க முடியாத நிலையில் இருந்தார். முகவரி இல்லை, ஆவணங்கள் இல்லை போன்றவை காரணங்களாக இருந்தன. இன்று அதே வியாபாரி தனது தொலைபேசி மூலம் வாடிக்கையாளர்களிடம் பணத்தை பெறுகிறார்.
உலகில் எந்த நாடும் கட்டமைக்காத ஒன்றை இந்தியா கட்டமைத்துள்ளது. 140 கோடி ஆதார் அட்டை என்ற மக்களுக்கு டிஜிட்டல் அடையாளத்தை வழங்கியுள்ளது. ஒவ்வொரு மாதமும் 2,000 கோடி ரூபாய் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் செய்யப்படுகிறது. 50 கோடி மக்களுக்கு டிஜிட்டல் சுகாதார அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு இந்தியாவும் பிரான்ஸும் இணைந்து ஏஐ செயல் உச்சி மாநாட்டை பாரிஸில் நடத்தியபோது, நமது சமூகங்கள் மற்றும் பொருளாதாரத்தை மாற்றும் தொழில்நுட்பங்களுக்கான உலகளாவிய வழிகாட்டு கொள்கைகளை நாங்கள் அமைத்தோம்.
மனிதகுலத்தின் நன்மைக்காகவும், புதுமைகளை வேகமாக உருவாக்கவும் செய்யறிவு உதவும் என்று நாங்கள் கூறுகிறோம். இந்தியாவும் பிரான்ஸும் இந்த புரட்சியில் நம்பிக்கை கொண்டுள்ளது.
இந்தியாவிடம் 140 கோடி மக்களை டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு கொண்டுவர முடியாது என்று உலக நாடுகள் 10 ஆண்டுகளுக்கு முன்பு கூறியது. அதை தவறு என்று இந்தியா நிரூபித்துள்ளது” எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.