

கோழிக்கோட்டில் சாப்பிட்ட உணவுக்கு பணம் கொடுக்க மறுத்ததோடு மூன்று பேர் கொண்ட கும்பல் உணவகத்தையும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தியுள்ளனர்.
கேரள மாநிலம், கோழிக்கோட்டில் துரித உணவகத்தில் சாப்பிட மூன்று பேர் கொண்ட கும்பல் சனிக்கிழமை இரவு சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் ரூ.600 மதிப்பிலான உணவை உட்கொண்டுள்ளனர். உணவு சாப்பிட்டு முடித்ததும், உணவக ஊழியர்கள் சாப்பிட்டதற்கான ரசீதைக் கொடுத்துள்ளனர். ஆனால், அந்தப் பகுதியில் உள்ள எந்த உணவகமும் எங்களிடம் பணம் வாங்குவதில்லை என்று கூறி 3 பேரும் பணம் கொடுக்க மறுத்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஆத்திரமடைந்த கும்பல் இரும்புத் தடியால் உணவகத்தைத் தாக்கியது. இதில் உணவகத்தின் பெயர்ப் பலகை மற்றும் உணவுப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த கண்ணாடி அலமாரி ஆகியவை அடித்து நொறுக்கப்பட்டன. இந்தத் தாக்குதலில் உணவக ஊழியர் ஒருவரும் காயமடைந்தார். சமீபத்தில் தொடங்கப்பட்ட உணவகத்துக்கு ஏற்பட்ட மொத்த சேதம் சுமார் ரூ.1.2 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மற்ற இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போலீஸ் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். தப்பியோடிய மற்ற இரண்டு குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர், அவர்களையும் கைது செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. குற்றம்சாட்டப்பட்டவர்கள் கடந்த காலங்களில் பல குற்ற வழக்குகளில் ஈடுபட்டுள்ளனர் என்று போலீஸார் மேலும் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.