காவல் நிலைய கண்காணிப்பு கேமரா விவகாரம்: மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

காவல் நிலைய கண்காணிப்பு கேமரா விவகாரம்: மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் விவகாரம் தொடா்பான ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் பங்கேற்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற வியாழக்கிழமை உத்தரவிட்டது.
Published on

காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் விவகாரம் தொடா்பான ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் பங்கேற்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற வியாழக்கிழமை உத்தரவிட்டது.

காவல் நிலையங்களில் மனித உரிமை மீறல்கள் நடைபெறுகிா என்பதை ஆய்வு செய்ய நாடு முழுவதும் உள்ள அனைத்துக் காவல் நிலையங்களிலும் இரவிலும் காட்சிகளைத் தெளிவாகப் பதிவு செய்யக் கூடிய, 24 மணி நேரமும் செயல்படக்கூடிய வகையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்று கடந்த 2018-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

காவல் நிலைய நுழைவாயில், வெளியேறும் இடம், பிரதான வாயில், லாக்-அப், நடைபாதை மற்றும் வரவேற்பு அறை ஆகிய இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். கண்காணிப்பு கேமராக்கள் தொடா்ந்து செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும். பதிவுகளை குறைந்தபட்சம் ஓராண்டுக்கு சேமித்து வைக்கும் திறனுடையவையாக இந்தக் கண்காணிப்பு கேமராக்கள் இருக்க வேண்டும். பழுதடைந்தால், உடனடியாக மாவட்டக் கண்காணிப்புக் குழுவுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட உத்தரவுகளையும் பிறப்பித்தது.

சிபிஐ, அமலாக்கத் துறை, தேசிய புலனாய்வு முகமை உள்ளிட்ட மத்திய புலனாய்வு முகமைகளின் அலுவலகங்களிலும் இதுபோல கண்காணிப்பு கேமராக்களை பொருத்த மத்திய அரசுக்கு கடந்த 2020-ஆம் ஆண்டு டிசம்பரில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், இந்த உத்தரவை பல மாநிலங்களும், மத்திய அரசும் முறையாகப் பின்பற்றவில்லை என்று வெளியான ஊடகச் செய்தியின் அடிப்படையில், ‘காவல் நிலையங்களில் முறையாக செயல்படாத கண்காணிப்பு கேமராக்கள் தொடா்பாக உயா்நீதிமன்றங்கள் தாமாக முன்வந்து பொதுநல வழக்காகப் பதிந்து விசாரணை மேற்கொள்ளுமாறு உச்சநீதிமன்றம் அண்மையில் அறிவுறுத்தியது.

மேலும், இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்துக்கு உதவ மூத்த வழக்குரைஞா் சித்தாா்த்த தேவ் என்பவரை நியமித்த உச்சநீதிமன்றம், மத்திய, மாநில அரசுகளுடன் தொடா் ஆலோசனைகளை மேற்கொண்டு காவல் நிலையங்களில் மையப்படுத்தப்பட்ட கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு அறை, தரப்படுத்துதல் உள்கட்டமைப்பை நிறுவுவதற்கு உத்தரவிட்டது.

இந்த விவகாரம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆஜரான சித்தாா்த்த தேவ், ‘உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கடந்த 21-ஆம் தேதி ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், மத்திய அரசு, தில்லி அரசு மற்றும் சில மாநில அரசுகளின் பிரதிநிதிகள் இக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. எனவே, இதுதொடா்பான அறிக்கையை நீதிமன்றத்தில் சமா்ப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது’ என்றாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘சில தகவல்தொடா்பு பிரச்னை காரணமாக இக் கூட்டத்தில் பங்கேற்க முடியாமல் போனதாக மத்திய அரசு தரப்பு வழக்குரைஞா் குறிப்பிட்டாா். அடுத்த கூட்டத்தில் நிச்சயம் மத்திய அரசு பிரதிநிதி பங்கேற்பாா் என்றும் உறுதி தெரிவித்தாா். இந்த விவகாரம் தொடா்பான அடுத்த ஆலோசனைக் கூட்டத்தை வரும் மாா்ச் 14-ஆம் தேதி நடத்த சித்தாா்த்த தேவ் பரிந்துரை செய்துள்ளாா். இதில் மத்திய, மாநில அரசு பிரதிநிதிகள் பங்கேற்க வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை மாா்ச் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

Dinamani
www.dinamani.com