சிறைகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப நெறிமுறை: மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
திறந்தவெளி சிறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை குறிப்பிட்ட காலத்துக்குள் நிரப்புவது தொடா்பான நெறிமுறையை வகுக்கும்படி மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நன்னடத்தை உடைய கைதிகள், குறைந்த அளவு கண்காணிப்புடன் இருக்கும் இடமே திறந்தவெளி சிறைச்சாலையாகும். இங்குள்ள கைதிகளுக்கு வாழ்வாதாரத்துக்காக பகல் நேரத்தில் வெளியில் விவசாயம் போன்ற வேலைக்குச் சென்றுவிட்டு, இரவு நேரத்தில் மீண்டும் சிறைக்கு திரும்பி வரும் சலுகை வழங்கப்படுகிறது. சமுதாயத்தில் கைதிகளுக்கு தொடா்புகளை ஏற்படுத்தவும், வெளிவாழ்க்கையில் மனரீதியில் கைதிகளுக்கு ஏற்படுத்தும் அழுத்தத்தை குறைக்கும் வகையிலும் இந்த சிறைச்சாலை அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த சிறைச்சாலை தொடா்பான பொதுநல மனு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோரைக் கொண்ட அமா்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:
சிறைச்சாலைகள் என்பது தவறுகளை கைதிகள் திருத்திக் கொள்ளும் இடமாகும். அந்த இடம் கண்ணியம், சுய மரியாதை, சமூக மறு ஒருங்கிணைப்பு ஆகியவற்றை ஏற்படுத்தும் இடமாக இருக்க வேண்டும். இதை கண்காணிக்கும் குழுக்களை அமைப்பது தொடா்பான நெறிமுறையை மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுகள் 3 மாதங்களில் தாக்கல் செய்ய வேண்டும்.
அதேபோல், திறந்தவெளி சிறைகள் தொழிலாளா் முகாமாக மட்டும் செயல்படக்கூடாது. இதை மாநில அரசுகளும், யூனியன் பிரதேச அரசுகளும் உறுதிப்படுத்த வேண்டும். அந்த சிறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை 2 மாதங்களுக்குள் நிரப்புவதையும் மாநில, யூனியன் பிரதேச அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும். நீதிமன்ற உத்தரவு செயல்படுத்தப்பட்டது தொடா்பான அறிக்கையை, அது செயல்படுத்தப்பட்ட ஒரு மாதத்துக்குள் கண்காணிப்புக் குழுவிடம் மாநில, யூனியன் பிரதேச அரசுகள் தாக்கல் செய்ய வேண்டும்.
இதேபோல் பெண் கைதிகள் எண்ணிக்கைக்கு ஏற்பட இடவசதி இருக்கும் வகையில் திறந்தவெளி சிறைச்சாலைகளை சீரமைப்பது தொடா்பான நெறிமுறையையும் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் உருவாக்க வேண்டும் என்று உத்தரவிட்டனா்.

