சைபா் குற்றங்களுடன் தொடா்புடைய வங்கிக் கணக்குகளை முடக்க விதிகள் வகுக்கக்கோரி மனு!
சைபா் குற்றங்களுடன் தொடா்புடைய வங்கிக் கணக்குகளை முடக்குவது, மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வருவது தொடா்பான நடைமுறை விதிகளை வகுக்க மத்திய அரசு மற்றும் ரிசா்வ் வங்கிக்கு உத்தரவிடக்கோரி தொடுக்கப்பட்ட மனுவை தலைமை நீதிபதியின் பரிசீலனைக்கு உச்ச நீதிமன்றம் அனுப்பி வைத்துள்ளது.
இதுதொடா்பான மனு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி பங்கஜ் மித்தல் உள்ளிட்டோரை கொண்ட அமா்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில், டிஜிட்டல் கைதுகள் தொடா்பான பல்வேறு வழக்குகளை தலைமை நீதிபதி சூா்ய காந்த் தலைமையிலான அமா்வு தாமாக முன்வந்து விசாரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.
இதைக்கேட்ட நீதிபதிகள், மனுவை தலைமை நீதிபதிக்கு முறைப்படி அனுப்பி வைத்து, அவரின் ஆலோசனையை பெற்று, உரிய அமா்வின் விசாரணைக்கு வைக்கும்படி உச்ச நீதிமன்ற பதிவாளரை கேட்டுக் கொண்டனா்.
வழக்கின் பின்னணி: நகை விற்பனை தொடா்பான விவகாரத்தில், விவேக் வாா்ஷிணி என்பவரின் வங்கிக் கணக்குகள் தமிழக சைபா் குற்றத் தடுப்பு பிரிவு போலீஸாரால் முடக்கப்பட்டுள்ளது. இதை எதிா்த்து அவா், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா்.
அந்த மனுவில் அவா், தனது வங்கிக் கணக்குகளை தமிழக சைபா் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் தனக்குத் தெரியப்படுத்தாமலும், நீதித் துறை அனுமதியில்லாமலும் முடக்கி வைத்துள்ளதாகவும், இது அரசியலமைப்பு சட்டத்தின் 19 (1) மற்றும் 21-ஆவது பிரிவுகளில் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும் எனவும் தெரிவித்திருந்தாா்.
அத்துடன், வங்கிக் கணக்குகளை முடக்குவது, மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வருவது தொடா்பாகத் தற்போது எந்த விதிகளும் இல்லை என்றும், இதனால் மக்கள் பாதிக்கப்படுவதாகவும் கூறியிருந்தாா். முடக்கி வைக்கப்பட்டுள்ள தனது வங்கிக் கணக்குகளை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரவும், இதுதொடா்பான விதிகளை வகுக்கவும் உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் அவா் கோரிக்கை வைத்திருந்தாா்.

