மாநிலங்களவை உறுப்பினராகும் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!
முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக நிதீஷ் குமார் அறிவித்துள்ளது பற்றி...


பிகார் முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக நிதீஷ் குமார் அறிவித்துள்ளார். மாநிலங்களவை உறுப்பினராக தனது அரசியல் பயணத்தைத் தொடரவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
பிகார் முதல்வர் நிதீஷ் குமார் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளதாகவும் முதல்வர் பதவியில் இருந்து விலகவுள்ளதாகவும் நேற்று முதல் தகவல்கள் வெளியாகின.
தற்போது நிதீஷ் குமார் இதனை உறுதி செய்துள்ளார். பிகார் முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக நிதீஷ் குமார் அறிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,
"கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களாகிய நீங்கள் எனக்கு தொடர்ந்து நம்பிக்கையையும் ஆதரவையும் அளித்து வருகிறீர்கள். இதனாலே பிகார் மக்களுக்கு நாங்கள் உண்மையாக நேர்மையாக சேவை செய்து வருகிறோம். உங்களுடைய நம்பிக்கை, ஆதரவின் காரணமாகவே பிகார் இன்று வளர்ச்சி அடைந்து வருகிறது. இதற்காக கடந்த காலங்களில் பலமுறை உங்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறேன்.
எனது நாடாளுமன்ற வாழ்க்கையின் தொடக்கத்திலிருந்து பிகார் சட்டப்பேரவையின் இரு அவைகளிலும் நாடாளுமன்றத்திலும் உறுப்பினராக வேண்டும் என்று விரும்பினேன். எனவே, இப்போது மாநிலங்களவை உறுப்பினராக, வரும் தேர்தலில் போட்டியிட விரும்புகிறேன்.
உங்களுடனான இந்த உறவு எதிர்காலத்தில் தொடரும் என்றும் பிகாரை வளர்ச்சியடைந்த மாநிலமாக உருவாக்க ஒன்றிணைந்து பணியாற்றுவேன் என்றும் நான் மனதார உறுதியளிக்கிறேன். புதிதாக அமையவுள்ள அரசுக்கு எனது முழு ஆதரவும் வழிகாட்டுதலும் இருக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.
பிகாரில் கடந்த 2025 நவம்பரில் நடைபெற்ற பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற நிதீஷ்குமார் முதல்வராக பதவியேற்ற 3 மாதத்தில் பதவியை ராஜிநாமா செய்வது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து பாஜக தரப்பில் ஒருவர் முதல்வராகலாம் என்று கூறப்படுகிறது.
நிதீஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார் சட்ட மேலவை உறுப்பினராக நியமிக்கப்பட்டு பிகாரின் துணை முதல்வராகப் பதவியேற்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிகார் முதல்வர்
பிகாரில் கடந்த 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெற்றது.
மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 202 தொகுதிகளில் வெற்றி பெற்று தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைத் தக்க வைத்துள்ளது. இந்த கூட்டணியில் அங்கம் வகித்த பாஜக 89, ஐக்கிய ஜனதா தளம் 85 தொகுதிகளில் வெற்றி பெற்றன. இந்தியா கூட்டணி தரப்பில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் 25 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி வெறும் 5 இடங்களில் மட்டுமே வென்றது.
இதன்மூலம் நிதீஷ் குமார் மீண்டும் பிகாரின் முதல்வராகப் பதவியேற்றார். தொடர்ந்து 10 முறை பிகார் முதல்வராகப் பொறுப்பேற்று சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...