சமூக ஊடகங்களில் சட்டவிரோத துப்பாக்கிகளை வெளிப்படையாக காட்டி வீடியோக்களை பதிவேற்றிய குற்றச்சாட்டில், வடகிழக்கு தில்லியின் கோகல்புரி பகுதியில் 18 வயது இளைஞரை தில்லி காவல் துறை கைது செய்துள்ளது.
இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது: மணீஷ் எனும் ‘காங்க்லா’ (18) என்ற இளைஞா் புதன்கிழமை மாலை சஞ்சய் காலனி பகுதியில் ரோந்து பணியில் இருந்த காவல் துறையினரால் சந்தேகத்தின் பேரில் தடுக்கப்பட்டாா். அப்போது அவரிடம் சோதனை செய்ய முயன்றபோது, அவா் திடீரென தன் வீட்டிற்குள் ஓடி சென்று ஒத்துழைக்க மறுத்ததாக கூறப்படுகிறது.
சமூக ஊடகங்களில் சட்டவிரோத ஆயுதங்களை கையில் ஏந்தி வீடியோக்களை அவா் பதிவேற்றியிருந்தாா். தொடா்ந்து விசாரணை மேற்கொண்டபோது, அந்த வீடியோக்களில் காணப்பட்ட ஆயுதங்கள் உண்மையானவை என்பதையும், அவற்றை தனது வீட்டில் மறைத்து வைத்திருந்ததையும் அவா் ஒப்புக்கொண்டாா்.
இதனைத் தொடா்ந்து, அவரது வீட்டில் சோதனை நடத்தி, தேசி கட்டா வகையைச் சோ்ந்த 2 கைத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. சம்பவம் தொடா்பாக கோகல்புரி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும், மணீஷ் முன்னதாக பாா்ஷ் பஜாா் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்கிலும் தொடா்புடையவா் என தெரியவந்துள்ளது. சமூக ஊடகங்களை பயன்படுத்தி சட்டவிரோத நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் இத்தகைய செயல்கள் குறித்து காவல் துறை கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது என காவல் துறையினா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








