எதிர்க்கட்சிக்கான கண்ணியத்தை காங்கிரஸ் கடைப்பிடிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி ஞாயிற்றுக்கிழமை வலியுறுத்தியுள்ளார்.
கேரள சட்டப்பேரவைத் தேர்தலின் போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே 'ரகசிய ஒப்பந்தம்' உள்ளதாக காங்கிரஸ் கட்சி பலமுறை குற்றம் சாட்டியுள்ளது. காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் இதை வெளிப்படையாக விமர்சித்துப் பேசியிருந்தனர்.
இது தொடர்பாக வருகிற திங்கள்கிழமை (ஜூன் 8) இந்தியா கூட்டணி கூட்டம் நடைபெறும் முன்பு காங்கிரஸ் தலைமை தெளிவுபடுத்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு எம்.ஏ. பேபி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
இது குறித்து எம்.ஏ. பேபி பேசியதாவது:
கார்கேவுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் நாங்கள் சில பிரச்னைகளை குறிப்பிட்டுள்ளோம். மேலும், அதை இந்தியா கூட்டணியின் மற்ற கட்சிகளுக்கும் தெரியப்படுத்தியுள்ளோம். ஆர்எஸ்எஸ்-ஆல் வழிநடத்தப்பட்டு கட்டுப்படுத்தப்படும் பாஜகவை எதிர்த்துப் போராடுவதற்கு, அரசியல் கட்சிகள் ஒன்றிணைய நாங்கள் விரும்புகிறோம்.
மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் இந்தியா கூட்டணி கட்சிகளுக்குள்ளேயே நேரெதிராக போட்டியிடும் சூழல் ஏற்படுவது உண்மைதான். அப்படி, நாம் ஒருவருக்கொருவர் போட்டியிடும் போது, கண்ணியத்துடன் நடந்துகொள்ள வேண்டும்.
ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவுடன் எங்களுக்கு ஒரு உடன்பாடு இருப்பதாக காங்கிரஸ் கட்சி கூறுவது அபத்தமானது. மக்களவையில் பிரதான எதிர்க்கட்சியாக இருப்பதால், எதிர்க்கட்சிக்கான கண்ணியத்தைப் பேணுவது காங்கிரஸின் பொறுப்பாகும்.
மதச்சார்பின்மையைப் பாதுகாப்பது மற்றும் மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்துப் போராடுவது தொடர்பான நிகழ்வுகளில் நாங்கள் தொடர்ந்து ஒத்துழைப்போம் என்று தெரிவித்தார் எம்.ஏ. பேபி.
Summary
M.A. Baby, National General Secretary of the Communist Party of India (Marxist), urged the Congress on Sunday to uphold the dignity befitting an opposition party.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







