அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்... வாய் திறக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கை பற்றி...
பிரதமர் நரேந்திர மோடி
கோப்புப் படம்
பிரதமர் நரேந்திர மோடி
கோப்புப் படம்
ஈரான் மீதான தாக்குதல்களைக் கண்டிக்காத மோடி அரசு இந்தியாவின் நாகரிக விழுமியங்களுக்குத் துரோகம் செய்துள்ளதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு வைத்துள்ளது.
அமெரிக்க, இஸ்ரேல் - ஈரான் போர் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் சில வாரங்களுக்கு முன்பு ஈரான் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டார். இதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்த நிலையில் ஈரானின் நட்பு நாடான இந்தியா சார்பில் உடனடியாக எந்தக் கண்டனமும் தெரிவிக்கப்படவில்லை.
மேலும், போரில் ஈரான் பள்ளியின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் கொல்லப்பட்ட போதும் இந்தியா கண்டனம் தெரிவிக்கவில்லை. தொடர்ந்து இந்த விவகாரத்தில் இந்தியா மௌனமாக இருந்து வருவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.
இதுபற்றி காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், ”ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்துத் தாக்குதல் நடத்தத் தொடங்கி இன்றுடன் 21 நாள்கள் கடந்துவிட்டன. மேலும், பெருமளவில் விளம்பரப்படுத்தப்பட்ட பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணம் முடிந்து இன்றுடன் 23 நாள்கள் ஆகின்றன.
ஈரான் மீதான தொடர் தாக்குதல்களால் இந்திய உள்பட பல நாடுகளில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது பற்றி மோடி அரசு ஏதாவது கண்டனமோ விமர்சனமோ செய்துள்ளதா? இல்லை.
அதேபோல, ஈரானின் உச்ச தலைவர்கள் மீது குறிவைத்து நடத்தும் படுகொலைகள் தொடர்பாக இந்த மோடி அரசு ஏதேனும் கண்டனமோ விமர்சனமோ தெரிவித்ததா? இல்லை.
ஈரானில் ஆட்சி மாற்றம் மற்றும் உள்நாட்டில் மோதல்களை ஏற்படுத்தும் விதமாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்தும் கொடூரமான செயல்களை இந்த மோடி அரசு கண்டனமோ விமர்சனமோ தெரிவித்ததா? இல்லை
ஈரான் நடத்திய தொடர் குண்டுவீச்சுகள் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள எரிசக்தி கட்டமைப்புகள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களை உடனடியாக நிறுத்துவதற்குத் தேவையான முயற்சிகளை இந்த மோடி அரசு செய்ததா? அமெரிக்க அதிபருடனும் இஸ்ரேல் பிரதமருடனும் பிரதமர் மோடி கொண்டிருக்கும் நட்பைப் பயன்படுத்தி போர்நிறுத்தத்தை ஏற்படுத்த அவர் முயன்றாரா? இல்லை.
இந்த நான்கு ‘இல்லை’ என்ற பதில்களும் இந்தியாவின் நாகரிக விழுமியங்களுக்கு நேர்ந்த அறமற்ற கோழைத்தனம் மற்றும் அரசியல்ரீதியான துரோகத்தையும் பிரதிபலிக்கின்றன” என்று அவர் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...