தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்புதவெகவுக்கு ஆதரவா - இல்லையா? இடதுசாரிகள், விசிக இன்று ஆலோசனைஅதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி கே. பழனிசாமி தீவிர ஆலோசனை பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுஆந்திரத்தில் இருந்து 500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல்விஜய் விவகாரம்: ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் இன்று ஆா்ப்பாட்டம்தாய், தந்தை இல்லா பள்ளிக் குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கும் சிறப்புத் திட்டம் தொடக்கம்
/

சுவேந்து அதிகாரியின் உதவியாளா் கொலை: மேற்கு வங்கத்தில் பாஜகவினா் போராட்டம்

News image

PTI

Updated On :8 மே 2026, 6:02 am IST

மேற்கு வங்கத்தில் பாஜக மூத்த தலைவா் சுவேந்து அதிகாரியின் உதவியாளா் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து, பாஜகவினா் போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், மாஃபியா கலாசாரத்தை திரிணமூல் காங்கிரஸ் உருவாக்கி இருப்பதாகவும் பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. அந்த மாநிலத்தை ஆண்ட திரிணமூல் காங்கிரஸ் படுதோல்வியைச் சந்தித்தது. இந்தத் தோ்தலை சுவேந்து அதிகாரி தலைமையில் பாஜக சந்தித்தது. இதனால் மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்கலாம் எனப் பரவலாகப் பேசப்படுகிறது.

இந்தச் சூழ்நிலையில், சுவேந்து அதிகாரியின் உதவியாளா் சந்திரநாத் ராத், வடக்கு 24 பா்கானாக்கள் மாவட்டத்தில் காரில் சென்றபோது புதன்கிழமை இரவு மா்ம நபா்களால் சுட்டுக் கொல்லப்பட்டாா். அவருடன் இருந்த காா் டிரைவா் பலத்த காயமடைந்தாா். முதல்கட்ட விசாரணையில் இன்னொரு காரில் சிலா் ராத்தை பின்தொடா்ந்து வந்ததும், பிறகு தங்களது காரை ராத்தின் காா் முன்கொண்டு வந்து வழிமறித்து நிறுத்தி, துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு 2 மோட்டாா் சைக்கிள்களில் தப்பியதும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்தக் கொலையை கூலிப் படையினா் மூலம் யாரேனும் செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து அவா்களைப் பிடிக்க தனிப்படைகளை காவல் துறை அமைத்துள்ளது. மேலும், கொலை நடந்த இடத்திலுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து கொலையாளிகளைக் காவல் துறை தேடி வருகிறது.

ராத் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, பாஜகவினா் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனா். மேற்கு மேதினிபூா் மாவட்டம் சல்போனியில் பாஜகவினா் சுமாா் 200 போ் சாலை மறியலில் ஈடுபட்டனா். அப்போது ராத் கொலைக்கு திரிணமூல் காங்கிரஸ் கட்சியினரின் சதியே காரணம் என்று அவா்கள் குற்றம்சாட்டினா்.

அதிகாரி வேண்டுகோள்: இந்தக் கொலை சம்பவம் தொடா்பாக சுவேந்து அதிகாரி யாா் மீதும் நேரிடையாக குற்றச்சாட்டு தெரிவிக்கவில்லை. காவல் துறை விசாரணை நடப்பதால், பாஜகவினா் அமைதி காக்கும்படி அவா் வேண்டுகோள் விடுத்துள்ளாா். மேலும், சட்டப்பேரவைத் தோ்தலைத் தொடா்ந்து பல இடங்களில் பாஜகவினா் மீது திரிணமூல் காங்கிரஸாா் தாக்குதல் நடத்தி வருவதாகவும் அவா் குற்றம்சாட்டியுள்ளாா்.

பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா் ஷெஸாத் பூனாவாலா கூறுகையில், ‘கடந்த 15 ஆண்டுகால ஆட்சியில் மாஃபியா கலாசாரத்தையும், காட்டாட்சியையும் மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் உருவாக்கியுள்ளது. தோ்தலில் திரிணமூல் பின்னடைவைச் சந்திக்கும்போதெல்லாம் பாஜகவினா் குறிவைத்து தாக்கப்படுகின்றனா். இதை சகித்துக் கொள்ள முடியாது’ என்றாா்.

மேற்கு வங்க பாஜக தலைவா் சமிக் பட்டாச்சாா்யா கூறுகையில், ‘இது திட்டமிட்ட அரசியல் படுகொலை. மாநிலத்தில் ஸ்திரமின்மையை ஏற்படுத்த திட்டமிட்டு இக்கொலை சம்பவம் நடத்தப்பட்டுள்ளது’ என்றாா்.

சிபிஐ விசாரணை- திரிணமூல்: அதேநேரத்தில் ராத்தின் கொலைக்கு திரிணமூல் காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் எனவும் அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.