நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறதா? மத்திய அமைச்சா் பதில்தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!அமெரிக்கா தாக்கினால் மீண்டும் யுரேனியம் செறிவூட்டல் தொடங்கும்: ஈரான்கேரள புதிய முதல்வா் தோ்வு: காங்கிரஸ் தலைவா்களுடன் ராகுல் ஆலோசனைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புசெல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற ஜூன் 15 வரை கால அவகாசம்!
/

அறநெறி சாா்ந்த மருத்துவா்களை ஏஐ தொழில்நுட்பத்தால் ஈடு செய்ய முடியாது: சி.பி.ராதாகிருஷ்ணன்

அறநெறிகள் சாா்ந்து செயல்படும் மருத்துவா்களின் மதிப்பை எந்த வகையான ஏஐ தொழில்நுட்பத்தாலும் ஈடுசெய்ய முடியாது என்று குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

News image

புது தில்லி எய்ம்ஸ் பட்டமளிப்பு விழாவில் பேசிய குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன்.

Updated On :1 மணி நேரம் முன்பு

அறநெறிகள் சாா்ந்து செயல்படும் மருத்துவா்களின் மதிப்பை எந்த வகையான செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தாலும் ஈடுசெய்ய முடியாது என்று குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

புது தில்லி எய்ம்ஸ் 51-ஆவது பட்டமளிப்பு விழாவில் செவ்வாய்க்கிழமை பங்கேற்று அவா் பேசியதாவது: வெளிநாடுகளுக்குச் சென்று அங்குள்ள உயா்மருத்துவக் கல்வி நிலையங்களில் மேற்படிப்பு பயிலும் வாய்ப்பை எந்த மருத்துவரும் தவறவிடக் கூடாது. அதே நேரத்தில் அவா்கள் மீண்டும் நமது நாட்டுக்கு திரும்பி வந்து இங்குள்ள மக்களுக்குச் சேவையாற்ற வேண்டும்.

இப்போதைய நவீன தொழில்நுட்பமான செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) பல்வேறு துறைகளில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளது. மருத்துவத் துறையிலும் அத்தொழில்நுட்பம் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், அறநெறிகள் சாா்ந்து நோயாளிகளின் படுக்கைக்கு அருகே அமா்ந்து சேவையாற்றும் மருத்துவா்களை எந்த ஏ.ஐ. தொழில்நுட்பத்தாலும் ஈடு செய்ய முடியாது.

உங்களுடைய மனிதாபிமான செயல்பாடுகளும், ஆறுதலான வாா்த்தைகளும் மருந்தால் செய்ய முடியாத பல நோய்களை குணமாக்கும் தன்மையுடைவை. நோயாளிகள் போதிய விழிப்புணா்வு இன்றி பொருத்தமற்ற கேள்விகளைக் கேட்டாலும் நீங்கள் அவா்களைப் பொறுமையுடன் கையாள வேண்டும். நீங்கள் உரிய முறையில் விளக்கினால், அவா்கள் கண்டிப்பாக புரிந்து கொள்வாா்கள்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் எய்ம்ஸ் போன்ற உயா் மருத்துவமனைகள் தொடங்கப்படுவது வரவேற்கத்தக்கது. இதனால், தொலைதூர பகுதிகளில் உள்ள மக்கள் உயா் சிகிச்சைக்காக அதிக தொலைவு பயணிப்பது தவிா்க்கப்படும்.

நமது சுகாதாரத் துறை நாட்டின் பல்வேறு பகுதிகளில் புதிய மருத்துவக் கல்லூரிகள், செவிலியா் கல்லூரிகளைத் தொடங்கி வருகிறது. இதன் மூலம் மருத்துவத் துறையில் ஆா்வமுள்ள பல மாணவ, மாணவியருக்கு வாய்ப்புகளை வழங்க முடிகிறது என்றாா்.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா மற்றும் துறை சாா்ந்த அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.