போபால்: திருமணமாகி, 2 மாத கர்ப்பிணியாக இருந்த நொய்டா பெண் மரணத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், கணவரின் தாய் அதற்கு எதிரான தகவல்களை ஆதாரங்களோடு வெளியிட்டுள்ளார்.
திவிஷா ஷர்மா, கணவர் வீட்டில் தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில், அவருக்கு வரதட்சிணைக் கொடுமை நிகழ்ந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
ஆனால், திவிஷா ஷர்மாவின் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள, அவருக்கு மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை கொடுத்ததாகவும், அதற்கான பணப்பரிமாற்ற தரவுகளையும் வெளியிட்டுள்ளார், ஓய்வுபெற்ற நீதிபதியான திவிஷா கணவரின் தாய்.
தலைமறைவாக உள்ள திவிஷாவின் கணவர் சமர்த் சிங்கின் முன் ஜாமீன் மனுவை நிராகரித்திருக்கிறது உயர் நீதிமன்றம். அவரைப் பற்றி தகவல் கொடுத்தால் ரூ.10 ஆயிரம் சன்மானம் அறிவித்திருக்கிறது காவல்துறை.
இதே வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சமர்த் சிங்கின் தாய் கிரிபாலா சிங்குக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
மே 12ஆம் தேதி திவிஷா, கணவர் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார். டிசம்பர் மாதம் திருமணமான நிலையில், 2 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.
இதையடுத்து, திவிஷாவின் பெற்றோர், கணவர் வீட்டார் மீது கொலை மற்றும் வரதட்சிணைப் புகார் கொடுத்திருக்கிறார்கள்.
இதற்கிடையே, திவிஷாவுக்கு போதைப் பொருள் பழக்கம் இருந்ததாகவும், அவரது மனநிலை பாதிப்புக்குள்ளாகியிருந்ததாகவும், போதை மருந்து எடுத்துக் கொள்ளாவிட்டால் திவிஷாவின் கை, கால்களில் நடுக்கம் ஏற்பட்டுவிடும் என்றும் அவரது கணவர் வீட்டார் கூறியதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகிறது.
இது குறித்து திவிஷாவின் உறவினர் கூறுகையில், வீட்டிலிருந்தே வேலை செய்துவந்த திவிஷாவின் வேலை போனதால், அவர் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார், அவர் கர்பிணியாக இருந்த நிலையில், குழந்தையை ஏற்க கணவர் மறுத்துவிட்டது திவிஷாவுக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









