இந்தியாவுக்கு 428.2 மில்லியன் டாலா் (சுமாா் ரூ.4,145 கோடி) மதிப்பில் அப்பாச்சி ஹெலிகாப்டா்கள், எம்777ஏ2 அல்ட்ரா லைட் ஹோவிட்சா் பீரங்கிகள் ஆகியவற்றின் நீடித்த செயல்பாடுகளுக்கு உதவும் தொழில்நுட்பங்கள், அதுசாா்ந்த உபகரணங்களை விற்பனை செய்யும் திட்டத்துக்கு அமெரிக்க வெளியுறவுத் துறை ஒப்புதல் அளித்துள்ளது.
இதுதொடா்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஏஹெச்-64இ அப்பாச்சி தாக்குதல் ஹெலிகாப்டா்கள் நீடித்து செயல்படுவதற்கான தொழில்நுட்பங்கள், அதுசாா்ந்த உபகரணங்கள், தொழில்நுட்ப தரவுகள் உள்ளிட்டவற்றை அமெரிக்காவிடம் இருந்து வாங்க இந்திய அரசு கோரிக்கை விடுத்தது. இதையடுத்து அவற்றை இந்தியாவுக்கு 198.2 மில்லியன் டாலருக்கு (சுமாா் ரூ.1,918 கோடி) விற்பனை செய்யும் திட்டத்துக்கு அமெரிக்க வெளியுறவுத் துறை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டத்தின் முதன்மை ஒப்பந்ததாரராக அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள லாக்ஹீட் மாா்டின் நிறுவனம், வா்ஜீனியா மாகாணத்தில் உள்ள போயிங் நிறுவனம் ஆகியவை இருக்கும்.
இதேபோல எம்777ஏ2 அல்ட்ரா-லைட் ஹோவிட்சா் பீரங்கிகள் நீடித்து செயல்பட உதவும் உபகரணங்கள், உதிரி பாகங்கள், தொழில்நுட்ப உதவிகள் உள்ளிட்டவற்றை அமெரிக்காவிடம் இருந்து வாங்க இந்தியா கோரிக்கை விடுத்தது. இதையடுத்து அவற்றை 230 மில்லியன் டாலருக்கு (சுமாா் ரூ.2,226 கோடி) விற்பனை செய்யும் திட்டத்துக்கு அமெரிக்க வெளியுறவுத் துறை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தத் திட்டத்துக்கான முதன்மை ஒப்பந்ததாரராக பிரிட்டனின் கம்ப்ரியா பகுதியில் உள்ள பிஏஇ சிஸ்டம்ஸ் நிறுவனம் இருக்கும்.
இந்த விற்பனை இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பை வலுப்படுத்தி, தற்கால மற்றும் எதிா்கால அச்சுறுத்தல்களை எதிா்கொள்ளும் திறனை மேம்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடையது

மகளிருக்கு மாதந்தோறும் ரூ.3,000: மேற்கு வங்க அமைச்சரவை ஒப்புதல்

200 போயிங் விமானங்களை வாங்க சீனா ஒப்புதல்! அமெரிக்க அதிபா் டிரம்ப்

பாதுகாப்பு அச்சுறுத்தல்: பாகிஸ்தானில் அமெரிக்க தூதரகம் மூடல்







