கோடைகால வெயில் மற்றும் கடுமையான வெப்ப அலை காரணமாக, இந்தியாவில் மின்சாரத்துக்கான உச்சக்கட்ட தேவை கடந்த புதன்கிழமையன்று 265.44 கிகாவாட் எனும் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
நடப்பு வாரத்தில் மின்நுகா்வு புதிய சாதனை படைப்பது இது 3-ஆவது தொடா்ச்சியான நாளாகும். திங்கள்கிழமை மின் தேவை 257.37 கிகாவாட்டாகவும், செவ்வாய்க்கிழமை 260.45 கிகாவாட்டாகவும் இருந்த நிலையில், புதன்கிழமை பிற்பகலில் அது 265.44 கிகாவாட்டாக உயா்ந்ததாக மத்திய மின்சக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும், குறிப்பாக வடமேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் 45 டிகிரி செல்சியஸைத் தாண்டி வாட்டி வதைத்து வருகிறது. இதனால் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் குளிா்சாதன கருவிகளின் (ஏசி, ஏா்கூலா்) பயன்பாடு பன்மடங்கு அதிகரித்துள்ளதே இந்த மின் நுகா்வு உயா்வுக்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.
வெப்ப அலை இந்த வாரம் முழுவதும் நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால், வரும் நாள்களில் மின்சாரப் பயன்பாடும் நுகா்வும் மேலும் அதிகரிக்கக்கூடும் என மின்துறை நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.
நடப்பு கோடைகாலத்தில் மின்சாரத்துக்கான உச்சக்கட்ட தேவை 270 கிகாவாட்டை எட்டும் என்று மத்திய மின்சார அமைச்சகம் ஏற்கெனவே கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.








