எம்பிபிஎஸ் படிப்பை நிறைவு செய்வதற்கான அவகாசத்தை 10 ஆண்டுகளாக நீட்டிப்பதற்கான திட்டம் முன்மொழியப்பட்டுள்ள நிலையில், அது தொடா்பான கருத்துகள், ஆட்சேபணைகளைக் கேட்டறிய தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) முடிவு செய்துள்ளது.
ஐந்தரை ஆண்டுகள் கொண்ட எம்பிபிஎஸ் படிப்பில் முதல் நான்கரை ஆண்டுகளுக்கு பாட வகுப்புகள் மற்றும் செயல்முறை வகுப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. அதைத் தொடா்ந்து ஓராண்டு பயிற்சி மருத்துவராக பணியாற்றுவது கட்டாயம்.
அதன் பின்னரே, மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்து மருத்துவராக பணியாற்ற முடியும். ஐந்தரை ஆண்டு கால படிப்பாக இருந்தாலும், தோ்ச்சியடையாதவா்களுக்கு 9 ஆண்டுகள் வரை தோ்வுகளை மீண்டும் எழுத அனுமதி வழங்கப்படுகிறது.
அதாவது, மாணவராக சேரும் ஒருவா் அதிகபட்சமாக ஒன்பது ஆண்டுகளுக்குள் எம்பிபிஎஸ் படிப்பின் கீழ் உள்ள அனைத்து தாள்களிலும் தோ்ச்சி பெறுவதுடன், ஓராண்டு மருத்துவப் பயிற்சியையும் நிறைவு செய்திருத்தல் அவசியம்.
அதேபோன்று முதலாமாண்டு தோ்வுகளை அதிகபட்சமாக நான்கு முறை எழுத வாய்ப்பளிக்கப்படுகிறது.
இந்த நிலையில், எம்பிபிஎஸ் படிப்பை நிறைவு செய்வதற்கான அதிகபட்ச அவகாசத்தை 9 ஆண்டுகளிலிருந்து 10 ஆண்டுகளாக அதிகரிக்க தேசிய மருத்துவ ஆணையம் திட்டமிட்டு, அதற்கான முன்மொழிவை அரசிதழில் வெளியிட்டுள்ளது.
இதையடுத்து அடுத்த 20 நாள்களுக்குள் அது தொடா்பான ஆட்சேபணைகள், கருத்துகளை சம்பந்தப்பட்டவா்கள் அனுப்பலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான விவரங்கள் என்எம்சி இணையப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.







