பெங்களூரில் உகாண்டாவைச் சேர்ந்த பெண்ணுக்கு எபோலா பாதிப்பு இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பெங்களூரில் உகாண்டாவைச் சேர்ந்த 28 வயதுப் பெண்ணுக்கு எபோலா வைரஸ் தொற்று அறிகுறிகள் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டதால் சுகாதாரத் துறை அதிகாரிகள் அவரைத் தனிமைப்படுத்தி கண்காணித்தனர்.
உகாண்டா நாட்டின் கம்பாலா பகுதியைச் சேர்ந்த நஜீர் லதீஃபா (28) என்கிற அந்தப் பெண் பெங்களூரில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தார்.
அவருக்கு, எபோலா வைரஸ் தொற்று அறிகுறிகள் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டதால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் அவரைத் தனிமைப்படுத்தி கண்காணித்தனர்.
அப்பெண்ணின் ரத்த மாதிரிகள் தேசிய வைரஸ் ஆய்வு நிறுவனத்தின் பெங்களூரு பிரிவு மூலம் புனேவில் உள்ள ஒரு சிறப்பு ஆய்வகத்திற்கு விரிவான பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், அப்பெண்ணுக்கு எபோலா பாதிப்பு இல்லை என்றும் பரிசோதனையின் முடிவு ‘நெகட்டிவ்’ ஆக வந்துள்ளதாகவும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுபற்றி கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் தனது எக்ஸ் தளப் பதிவில், “ எபோலா தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்பட்ட நபருக்கு பரிசோதனை நடத்தப்பட்டதில், அந்த நபருக்கு எபோலா பாதிப்பு இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதனால், இந்தியாவில் எபோலா தொற்று பாதிப்பு யாருக்கும் இல்லை என்பது உறுதியாகியுள்ளது. தற்போது இதுதொடர்பான கண்காணிப்பு மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மத்திய அரசின் சுகாதார நெறிமுறைகளின்படி, ஆப்ரிக்க நாடுகளான உகாண்டா மற்றும் காங்கோவிலிருந்து இந்தியா வரும் பயணிகள் எபோலா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக 21 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர்.
மத்திய ஆப்ரிக்காவில் எபோலா வைரஸ் தொற்று காரணமாக இந்தாண்டில் மட்டும் 264 பேர் பலியானதாகக் கூறப்படுகிறது.
Summary
Ugandan Woman in Bengaluru Not Infected with Ebola: Medical Tests Confirm
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








