உ.பி.யில் சிறுமி பாலியல் வன்கொடுமை! 16 வயது சிறுவனுக்கு 25 ஆண்டுகள் சிறை!
பாலியல் வன்கொடுமை வழக்கு பற்றி..
உத்தரப் பிரதேசத்தின், பல்லியாவில் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 16 வயது சிறுவனுக்கு உள்ளூர் நீதிமன்றம் 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சிறப்பு அரசு வழக்குரைஞர் விமல் குமார் ராம் தெரிவித்தன்படி,
நீதிபதி பிரதம் காந்த், காசிபூரில் உள்ள சிறப்புக் கண்காணிப்பாளருக்கு ஒரு உத்தரவைப் பிறப்பித்தார். அதன்படி, தண்டனை பெற்ற சிறுவனுக்கு 21 வயது பூர்த்தியாகும் வரை அவனது கல்வி மற்றும் உடல், மன வளர்ச்சியை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவனுக்கு 21 வயது பூர்த்தியான பிறகு, மீதமுள்ள தண்டனைக் காலத்தைக் கழிப்பதற்காக அவன் மாவட்ட சிறைக்கு மாற்றப்படுவான்.
சிறுவர் நீதிச் சட்டத்தின் பிரிவு 20-ன் படி, அவனது முன்னேற்றம் குறித்த விவரங்கள் நன்னடத்தை அலுவலர் மூலம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று ராம் கூறினார்.
குற்றச்சாட்டின்படி, ஆகஸ்ட் 21, 2024 அன்று சித்பராகான் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கிராமம் ஒன்றில், வீட்டில் சிறுமி தனியாக இருந்தபோது இக்குற்றம் நிகழ்ந்தது.
அச்சிறுமியின் தந்தை கூலி வேலைக்குச் சென்றிருந்த நிலையில், தாயார் தனது பிறந்த வீட்டிற்குச் சென்றிருந்தார். இந்தச் சூழலைப் பயன்படுத்தி குற்றம் சாட்டப்பட்ட நபர் அத்துமீறியதாகக் கூறப்படுகிறது.
சிறுமியின் தந்தையின் புகாரின் அடிப்படையில், பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன், ரூ. 50 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





